எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன்  மறைந்த தினம் இன்று  . இளம் வயதில் அறிவியலின் மீது தீராத ஆர்வம் கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் . ஜெர்மனியில் பல்வேறு பல்கலைகழங்களில் வேலைபார்த்த அவர், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது உலகப்போர் வந்து விட்டதால் ஜெர்மனியிலேயே இருந்துவிட்டார் .

பேரியம் பிளாடினோ சயனைட் பூச்சு பூசிய திரை,மற்றும் க்ரூக்ஸ் குழாய் ஆகியவற்றை கருப்பு கார்ட்போர்டில் சுற்றி வைத்துக்கொண்டு கேதோட் கதிர்களை பற்றி ஆய்வு செய்கிற பொழுது திரையில் மங்கலான பச்சை ஒளிரலை அவர் கண்டார் . அதற்கு காரணமான கதிரை எக்ஸ் கதிர் என அழைத்தார் . அந்த கதிரின் பண்புகள் புரியாததால் அவர் அப்படி அழைத்தார். அவரின் பெயரையே அதற்கு சூட்டவேண்டும் என்று பிறர் சொன்ன பொழுது ,”எத்தனையோ பேர் கடந்து வந்த பாதையை பின்பற்றி இந்த கதிர்களை கண்டிருக்கிறேன் நான். அதற்கு என் பெயரை வைப்பது சரியல்ல !” என்று அழுத்தமாக மறுத்தார்.

அவை புத்தகங்கள் ,வழியாகவும் மனித உடல்களின் வழியாகவும் கடந்து போவதை கண்டார் ;நடுவில் இந்த கதிர்களின் மீது மனைவியின் கைபட்டு அவரின் எலும்புகள் அப்படியே பதிவான பொழுதுதான் எலும்புகளை கடந்து எக்ஸ் கதிர்கள் செல்லாது என்பதும் அதைக்கொண்டு  குண்டுகள் ,ஏதேனும் குறைகள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பின்  கண்டறிய பயன்படுத்தலாம் என உணர்ந்து அதை செயல்படுத்தினார் . பியரி கியூரியை போலவே தன் கண்டுபிடிப்புகளை அவர்
காப்புரிமை செய்யவில்லை .மனித குலத்துக்கே அவை பயன்படட்டும் என உறுதியாக இருந்தார் .

அவருக்கு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது ;அதில் கிடைத்த பணத்தை தான் வேலை பார்த்த பல்கலைகழகத்திற்கே கொடுத்து விட்டார் . உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு அவரும் பசியால் பல நாட்கள் வாட நேர்ந்தது. அவரின்  நிலையறிந்து வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவர் நிறைய வெண்ணெய்  கட்டிகளை அனுப்பிவைத்தார். அதை உடனிருந்த எண்ணற்ற சகாக்கள் மற்றும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டே இவர் நிறைவடைந்தார்.  பல்வேறு அயனிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்த இவர் இதே நாளில் மறைந்தார் .அவரின் பெயரில் தனிம அட்டவணையின் 111 வது தனிமம் வழங்கப்படுகிறது.

Leave a Reply