தேமுதிகவை கை கழுவ திமுக, பாஜக அதிரடி முடிவு?
காஞ்சிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த தேமுதிகவின் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த் கிங்’கா அல்லது ‘கிங் மேக்கரா?’ என்று தொண்டர்கள் மத்தியில் கேட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த மாநாட்டில் அவர் கூட்டணி குறித்து ஒரு தெளிவான முடிவை அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த தொண்டர்களை மட்டுமின்றி அவரை நம்பி அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளையும் அவர் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேமுதிக பிடிகொடுக்காமல் இழுபறி செய்து வருவதால் எரிச்சலடைந்துள்ள பாஜகவும், திமுகவும் விஜயகாந்தை கைகழுவ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
திமுகவை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் ஒருசில சிறிய கட்சிகளின் கூட்டணியோடு களமிறங்க தன்னை தயார்படுத்தி வருகிறது. வேட்பாளர் நேர்காணலையும் அந்த கட்சி தொடங்கிவிட்டது. விஜயகாந்த் வந்தால் சேர்த்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் இருக்கும் கூட்டணியுடன் களமிறங்குவோம் என்ற மனநிலைக்கு அந்த கட்சி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வரும் பாஜக, பாராளுமன்றத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத தேமுதிகவை இனியும் நம்பாமல் வேறு வழியில் களமிறங்க தொடங்கிவிட்டது. விஜயகாந்துக்கு பதிலாக ரஜினியை எப்படியாவது இழுக்க முழு முயற்சிகள் செய்ய மோடியின் ஆசியோடு வேலையை தொடங்கிவிட்டது. ஆனால் இதற்கு ரஜினி என்ன பதில் சொல்வார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
திமுகவும், பாஜகவும் கைகழுவிட்டால், தேமுதிகவின் நிலைமை பரிதாபமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் நலக்கூட்டணியுடனோ அல்லது தனித்தோ தேமுதிக நின்றால் தேமுதிக சந்திக்கும் கடைசி தேர்தல் இதுதான் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.