எகிப்து விமானத்தை கடத்த தீவிரவாதியின் காதலி காரணமா? திடுக்கிடும் தகவல்
எகிப்து நாட்டின் விமானம் ஒன்று அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்றபோது தீவிரவாதி ஒருவன் அந்த விமானத்தை கடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடத்தப்பட்ட MS181 என்ற விமானத்தில் 55 பயணிகளும், விமானி உள்பட ஏழு பேரும் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் தீவில் உள்ள லர்னாகா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள அந்த விமானத்தை கடத்திய தீவிரவாதி தனது இடுப்பில் வெடிகுண்டுடன் கூடிய பெல்ட்டை கட்டியுள்ளதாகவும், எனவே, தரையிறக்கப்பட்ட விமானத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் சைப்ரஸ் விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதியுடன் நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சுவார்த்தையால் விமானத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் மட்டும் வெளியே செல்ல கடத்தல்காரன் அனுமதி அளித்துள்ளதாகவும் இதையடுத்து, சுமார் 40 பேர் விமானத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது அந்த விமானத்தில் 10 அமெரிக்க பயணிகள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த எட்டு பயணிகள் என மொத்தம் 18 பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர்.
இந்நிலையில் தனக்கு சைப்ரஸ் தீவில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், விமானத்தை தகர்த்து விடுவேன் என கடத்தல்காரன் சைப்ரஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளான். அவனது இந்த கோரிக்கை தொடர்பாக சைப்ரஸ் அரசு அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சைப்ரஸ் நாட்டு பெண்ணான தனது முன்னாள் மனைவியை சந்தித்துப்பேச வேண்டும் எனவும் அந்த கடத்தல்காரன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து, அவன் போலீசாருக்கு அளித்த ஒரு கடிதத்தில் உள்ள முகவரியின் அடிப்படையில் அந்தப் பெண்ணை கண்டுபிடித்த போலீசார், அந்தப் பெண்ணை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.