shadow

ஜாமீன் மனுத் தாக்கல் செய்வோம்: டிடிவி தினகரனின் வழக்கறிஞர்

லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை ஜாமீனில் விடுவிக்க கோரி மனுத் தாக்கல் செய்யப்படும் என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சி மற்றும் இரட்டை இல்லை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் ரூ.1.30 கோடி ரூபாயையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க இடைத்தரகர் சுகேஷ் சந்திரா மூலம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டு, ரூ.10 கோடியை தினகரன் அளித்ததாகவும் தகவல் வெளியானது. அதேசமயம், சுகேஷ் சந்திரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்மன் அளித்தனர்.

டெல்லி போலீசார் அளித்த சம்மனின் அடிப்படையில், டிடிவி தினகரன் கடந்த 22-ம் தேதியன்று நேரில் ஆஜரானார். கடந்த நான்கு நாட்களாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் நான்கு நாட்களில், சுமார் 37 மணி நேரம் தினகரனிடம் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, இன்று பிற்பகல் 2 மணியளவில், டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில், தினகரனை ஜாமீனில் விடுவிக்க கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படும் என அவரது தரப்பு வழக்கறிஞர் சார்தக் நாயக்தெரிவித்துள்ளார்.

Leave a Reply