shadow

நாங்க ரொம்ப மோசமானவங்க. அதிமுக, திமுகவுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை

vijayakanthதஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் உடல்நிலை காரணமாக முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்யும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேசியதாவது:

“இந்த தொகுதியில நிறைய பிரச்னைகள் இருக்கிறது. பொதுக்கூட்டத்துக்கு வரும்போது இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதை நான் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் மத்தவங்க மாதிரி எழுதி வச்சு படிக்கறதில்லை. என மனசுல என்ன தோணுதோ, அதைத்தான் பேசுறேன். சிலர் சொல்றாங்க. மேடை நாகரீகம் வேணும்னு. நான் என்ன காசு கொடுத்தா மேடை நாகரீகத்தை கற்றுக்கொண்டேன். நான் ஒரு ‘ஸ்லோ ரீடர்’ நான் பேச நினைப்பதை எடிட் பண்ணித்தான் பேசுவேன். நான் நிறைய நினைத்துக்கொண்டு வருவேன் ஆனால் பேசும்போதும் எடிட் செய்துதான் பேசுவேன்.

இந்தத் தொகுதியில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். மத்திய அரசு செல்லாது என அறிவித்துள்ள பணத்தை உங்களிடம் கொடுத்து ஓட்டு கேட்கிறார்கள். நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம். ‘நாங்க பணம் கொடுக்கலை’னு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சத்தியபிரமாணம் செய்து கொடுக்க முடியுமா? நான் செய்துகொடுக்க முடியும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதை என்னால் சத்தியபிரமாணம் செய்துகொடுக்க முடியும்.

ஒரு வருடத்திற்கு 900 கோடி மணல் குவாரியில் சம்பாதிக்கிறார்கள். அது அதிமுக ஆட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சியாக இருந்தாலும் இது தான் நிலைமை. எங்களை சீண்டிப்பார்க்க வேண்டாம். நாங்க மோசமானவங்க,”

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Leave a Reply