shadow

சினிமாவில் தாங்கள் சம்பாதித்த புகழை ரஜினி கமல் இழப்பார்கள்: விஜயபாஸ்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தமிழக அரசியலில் குதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுக, தினகரன் ஆகிய மூன்று கட்சிகளையும் எதிர்த்து இந்த இருவரும் அரசியல் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அ.தி.மு.க எனும் பெரிய மாளிகையிலிருந்து ஒரு செங்கலைக் கூட யாராலும் அசைக்க முடியாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் பேசியதாவது: “திரையுலகிலிருந்து சில நடிகர்கள் அரசியலுக்குப் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்றால், ‘இரண்டே நிமிடத்தில் ஆயிரம் கிலோ மீட்டரை, கவனமாகக் கேளுங்கள். ஆயிரம் மீட்டர் இல்லை.’ ஆயிரம் கிலோ மீட்டர் தாண்ட முயற்சிக்கிறார்கள். அது சாத்தியமில்லாதது. அரசியல் எனும் சுழலிலும் சூறாவளியிலும் முதல் சுற்றிலேயே அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். நமது புரட்சித் தலைவரையும் புரட்சித் தலைவியையும் பார்த்துவிட்டு, அவர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள். நமது தலைவரும் தலைவியும் எங்கே… இவர்கள் எங்கே? சினிமாவில் தாங்கள் சம்பாதித்த புகழை இழந்து நிற்கப் போகிறார்கள்” என்று கூறினார்.

மேலும் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் பேசியபோது, “இங்கு ஒருவர் முதல்வராகும் கனவில் இருக்கிறார். என்னதான் தாயத்தை உருட்டினாலும் அவரது கனவு நிறைவேறப்போவதில்லை. யார் என்ன முயற்சித்தாலும் அ.தி.மு.க எனும் பெரிய மாளிகையிலிருந்து ஒரு செங்கலைக் கூட அசைக்க முடியாது” என்றார்.

Leave a Reply