shadow

 home joint loan_0_0_0

சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி முடிக்க வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன்தான் பலருக்கும் கை கொடுக்கிறது. வீட்டுக் கடனை வாங்கும்போது பலரிடமும் நாம் ஆலோசனைகள் நிறையக் கேட்போம். ஏற்கனவே கடன் வாங்கியவர்களிடம் அறிவுரைகளைக் கேட்போம். அப்படி கேட்கப்படும், பகிர்ந்து கொள்ளப்படும் சில விஷயங்களைப் பார்ப்போமா?

தவணை வசதி

வீட்டுக் கடன் பெற்றவரிடம் இருந்து மாதத் தவணையை (இ.எம்.ஐ.) வங்கிகள் வசூலிக்கும் அல்லவா? இந்த மாதத் தவணை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக, மாதத் தவணைத் தொகையை நாம் கட்டி முடிக்கும்வரை ஒரே அளவாக இருப்பது போல வங்கிளும், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களும் நிர்ணயிக்கும். சில வங்கிகளும், சில நிறுவனங்களும் இளம் வயது உள்ளவர்களை மனதில் வைத்து, வீட்டுக் கடன் வாங்கிய புதிதில் குறைவாகவும், வருவாய் அதிகரிக்க அதிகரிக்க மாதத் தவணையை அதிகமாகவும்கட்ட அனுமதிக்கும்.

இந்த விஷயத்தில் நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு வேறு முறையைப் பின்பற்றுவார்கள். அதாவது, தொடக்கத்தில் மாதத் தவணை அதிகமாவும், போகப் போக குறைவாவும் கட்டும்படியும் ஏற்பாடு செய்திருப்பார்கள். இதுபோன்ற சில வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வட்டி மட்டும் போதும்

பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம், கேட்கப்படும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும். அதாவது சொந்த வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு வாடகை வீட்டில் இருந்தபடிதான் கட்டுமானப் பணிகளைச் செய்வார்கள். கட்டுமானப் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் ஆகலாம். அந்தக் காலகட்டத்தில் நாம் பெற்ற வீட்டுக் கடனுக்குத் தவனைத் தொகை செலுத்துவதா வேண்டுமா என்ற கேள்வி எழும்.

வீடு கட்டும் கால கட்டத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டியை மட்டுமே பெரும்பாலான வங்கிகளும், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களும் வசூலிக்கும். ஆனால், கட்டிய வீட்டை வாங்கினால், இந்த வசதி அவர்களுக்குக் கிடைக்காது. கடன் வாங்கிய அடுத்த மாதத்திலிருந்தே மாதத் தவணையையும் சேர்த்து கட்டியே ஆக வேண்டும்.

சலுகைகள் கிடைக்க

கடன் பெறுபவர் செய்யும் வேலை, அவர் சார்ந்த நிறுவனங்களைக் கணக்கில் கொண்டு சில வங்கிகள் முக்கியத்துவமும் சலுகையும்கூட வழங்குவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் ஏற்கெனவே வாங்கிய கடனைச் சிக்கல் இல்லாமல் கட்டி முடித்திருந்தால் முக்கியத்துவம் கிடைக்கும். ஒரு சில வங்கிகள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வட்டி விகிதத்தில் சலுகை காட்டவும் செய்வார்கள். இன்னும் சில வங்கிகள் முன்தொகையை (மார்ஜின்) அதிகமாக வழங்குபவர்களுக்கு வட்டி விகிதத்தில் சலுகை வழங்குவதும் உண்டு. இந்த முறைகள் எதுவும் விதிமுறைப்படி வழங்கப்படுவதில்லை. கடன் வாங்குபவர் பேசுவதைப் பொறுத்துக் காட்டப்படும் சலுகைகள்தான்.

80ee-tax-deduction-home-loan-interest

கூடுதல் கால அவகாசம்

சிலர் 45, 50 வயதில் வீட்டுக் கடன் பெறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் மாதத் தவணையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் எத்தனை ஆண்டுகள் வழங்குவார்கள் என்ற ஒரு கேள்வி எழலாம். வயதான பிறகு வீட்டுக் கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் இ.எம்.ஐ.-யைக் கட்டி முடித்து விடுவாரா என்பதை வங்கிகள் முக்கியமாக ஆராயும். ஒருவேளை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் இருக்குமேயானால், அதிகபட்சம் 70 வயதுவரைகூடக் கடனை அடைக்க அவகாசம் தரப்படுகிறது.

ஆனால் கடன் பெறும் நபர், 60 வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால், அவரது வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அல்லது

கோ-ஃபாலோயர் எனப்படும் கடன்தாரருக்கு இணையாகப் பொறுப்பை ஏற்கும் நபர், அதற்கான உத்தரவாதத்தை வங்கிக்கு எழுதிக்கொடுக்க வேண்டும். இந்த நிபந்தனைக்குட்பட்டு வங்கிகள் கால அவகாசத்தை வழங்குவதும் உண்டு.

மாற்று யோசனை

ஒருவேளை நீங்கள் நிரந்தரமாக ஒரு வேலையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். உங்களுடைய பி.எஃப். கணக்கில் சேர்ந்திருக்கும் தொகையை வைத்துகூட வீட்டு மனையோ, வீடோ வாங்க முடியும். வீட்டு வசதி வாரியம் கட்டும் வீடுகள் விற்பனைக்கு கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளலாம். தவணை முறையில் கடனை அடைக்கும் வசதி இருக்கிறது.

Leave a Reply