கனவில் வருகிறார் கலைஞர்: கருணாநிதி சந்திப்பின்போது கண்கலங்கிய வைகோ
திமுக தலைவர் கருணாநிதியை இன்று மதிமுக பொதுச்செயலாளர் சந்திக்கின்றார் என்ற செய்தியை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் கோபாலாபுரம் வீட்டில் இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பு நடந்தது.
இரண்டு வருடங்களுக்கு பின்னர் தனது அரசியல் குருவான கருணாநிதியை சந்தித்த வைகோ கண் கலங்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
53 ஆண்டுகளுக்கு முன்பாக முதன்முறையாக கல்லூரியில் வைத்து கருணாநிதியைப் பார்த்தேன். என்னை அரசியலில் வளர்த்தவர் கருணாநிதி. 23 ஆண்டுகளாக கருணாநிதியின் நிழலாக இருந்தேன். அவர் மீது சிறு துரும்பு கூட விழாமல் பார்த்துக்கொண்டேன். கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் அவர் என்னுடைய கனவில் வருகிறார். நான் சென்று வருகிறேன் என்று கூறியபோது என்னைப் பார்த்து சிரித்தார். அவர் நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். திராவிட இயக்கத்தின் மணியோசைக் குரலாக கருணாநிதியின் குரல் மீண்டும் ஒலிக்கும். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள முரசொலி பவளவிழாவில் கலந்துகொள்வேன்’ என்று தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.