உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு. முதல்வர் ஹரீஷ் ஆட்சி தப்புமா?
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென கலைத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது. இதனால் கடும் அதிருப்தி அடநித முதல்வர் ஹரீஷ், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் மே 10 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ஏற்கனவே பேரவை தலைவரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.
70 பேர் கொண்ட உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் தகுதி நிக்கம் செய்யப்பட்ட 9 பேர் தவிர மீதியுள்ள 61 பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவையில் தற்போது 33 எம்எல்ஏக்களின் ஆதரவு ஹரீஷ் ராவத்துக்கு உள்ளதாக கூறப்படுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரீஷ் தலைமையினான அரசு தப்பிப் பிழைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். வாக்கெடுப்புக்கான சிறப்பு பார்வையாளராக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் ஜெய்தேவ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.