இந்தியக் கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான ‘நாயகிதேவி’ என்ற ரோந்துக் கப்பலில் கடலோர காவல்படை வீரர்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 30 மைல் தொலைவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நவீன ஆயுதங்களுடன் வெளிநாட்டுக் கப்பல் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டனர். அனுமதியின்றி நுழைந்த அந்த கப்பலை கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்து, தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து 2வது தளத்தில் நிறுத்தினர். இதனை தொடர்ந்து அந்த கப்பலில் கியூ பிரிவு, மத்திய, மாநில உளவுத்துறையினர், கடலோர காவல் படை, மரைன் போலீசார் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். ‘சீமென் கார்டு ஓகியா’ என்ற அந்தக் கப்பல் அமெரிக்காவில் உள்ள அட்வன்போர்ட் என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும் கப்பலில் 10 மாலுமிகள், 25 வீரர்கள், 3 நவீன ரக துப்பாக்கிகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள சியரா லியோன் என்ற சிறிய நாட்டில் கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிகாவில் ஹெர்ன்டன் ஐ தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘அட்வன் போர்ட்’ என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சொந்தமாக இதுபோன்று 3 கப்பல்கள் உள்ளன.‘சீமென் கார்டு ஓகியா’, ‘டெக்ஸாஸ்’, ‘வெர்ஜினியா’ என்ற இந்த 3 கப்பல்களுமே அமெரிக்க அரசிடம் பதிவு பெற்று வில்லியம் ஹக்ஸ் வாட்சன் (61) என்பவரது தலைமையின் கீழ் இயக்கப்பட்டுவருகின்றன. இவை கடல் பயணத்தின் போது ஏற்படும் கொள்ளையர்கள் தாக்குதல், கப்பல் கடத்தல் உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து தனியார் கப்பல்களை காக்கும் பணியில் தனியார் ராணுவம் போல நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர்கள், கடற்படையை சேர்ந்தவர்கள், நவீன ஆயுதங்களை அதிவேகமாக கையாளும் திறன் கொண்டவர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 3 கப்பல்களும் மஸ்கட், சூயஸ்கால்வாய், அரிசோனா ஆகிய கடல் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். எந்த கப்பல் எந்த பகுதிக்கு செல்லவேண்டும் என தலைமையகத்தில் இருந்து உத்தரவு கிடைத்ததும் அங்கு புறப்பட்டு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்பது ‘அட்வென் போர்ட்’ நிறுவனத்தின் உத்தரவு. இதனடிப்படையில் கடந்த 11ம் தேதியன்று வங்காள விரிகுடாவில் பயணித்த ‘சீமென்கார்டு ஓகியா’வில் டீசல் அளவு வெகுவாக குறைந்ததால் அதன் கேப்டன் டட்க்னிக் வாலென்டின் (64) தலைமையகத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

அங்கிருந்து டீசலுக்காக அருகில் உள்ள தூத்துக்குடி துறை முகம் அருகே செல்ல வேண்டும் என்றும், அங்கு ‘அட்வன் போர்ட்’டின் பிரதிநிதிகள் மூலம் டீசலுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பின்னரே ‘சீமென் கார்டு ஓகியா’ தூத்துக்குடியை நெருங்கி வந்து, கடலோர காவல் படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் இக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நாயகிதேவி கப்பலின் கமான்டண்ட் நரேந்தர் தூத்துக்குடி தருவைகுளம் மரைன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.கப்பல் கேப்டன் வாலென்டின் உள்ளிட்ட 35 பேர் மீதும்  தோட்டாக்களை அளவுக்கு அதிகமாக வைத்திருத்தல், (ஆயுத தடை சட்டம்) சட்டவிரோதமாக டீசல் பரிமாற்றம் (ஹைஸ்பீட் டீசல் பிரிவென்சன் ஆப் மால்பிராக்டிஸ் அன்ட் டிஸ்டிரபியூசன் ஆர்டர் ஆக்ட் 1990) மற்றும் அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு அதிகமாக பயண நேரம் எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை இந்த கப்பலை தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும் அமெரிக்காவின் ‘ஹெர்ன்டன் ஐ’ நகரில் செயல்பட்டு வரும் ‘அட்வென் போர்ட்’ செக்யூரிட்டி நிறுவனம் உடனடியாக துபாயில் உள்ள தனது கிளை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தது. அங்கு பணியாற்றும் கப்பல் நிறுவன பிரதிநிதி சாக்கோ தாமஸ் என்பவர் நேற்று தூத்துக்குடி வந்தார். அவர் தங்கள் நிறுவனம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவரிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply