TNPSC விடைத்தாள் வெளியான விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குருப்-1 தேர்வு விடைத்தாள் வெளியான விவகாரம் தொடர்பான வழக்கில், தேர்வு பெற்றவர்களின் பணி நியமனங்கள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு 68 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் – 1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றப் பிரிவு காவல் துறை சார்பில் வழக்கின் நிலை குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், மூன்று தனியார் பயிற்சி மையங்களில் சோதனை செய்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக பலர் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, நீதிமன்றம் 3 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, காவல் துறைக்கு ஒரு மாத காலஅவகாசம் வழங்கினார். மேலும் இந்த தேர்வில் தேர்வு பெற்றவர்களின் பணி நியமனம் என்பது வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் வருவாய்த் துறைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், வணிக வரித் துறை செயலாளர், டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை 4 வார காலத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.