shadow

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்து தமிழக அரசு அதிரடி முடிவு. திமுக அதிர்ச்சி

naliniதமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வரும் நிலையில் ஆளுங்கட்சியான அதிமுக திடீரென ராஜீவ் கொலையாளிகளின் விடுதலையை கையில் எடுத்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு நல்ல பெயர் ஏற்படும் என்றும் இந்த விடுதலையை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதும் அதிமுகவுக்கு பெரும் சாதகமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தமிழக அரசு செக் வைத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு நேற்று கடிதம் எழுதியுள்ளது.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் சாந்தன், பேரறிவாளன், முருகன், ஆகிய மூவரின் கருணை மனு விசாரிக்கப்பட்டு அவர்களை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தது.

ஆனால் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஏழுபேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.  இந்நிலையில் சமீபத்தில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யுமாறு அரசுக்கு எழுதிய கடிதத்தை அடிப்படையாக வைத்து தமிழக அரசு ஏழு பேர்களையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி கடிதம் எழுதியுள்ளது.

இந்த கடிதத்திற்கு அதிமுக தலைமை எதிர்பார்த்ததுபோல் வைகோ உள்பட சில எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏழு பேர் விடுதலையை எதிர்க்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல் இக்கட்டான நிலையில் திமுக உள்பட ஒருசில எதிர்க்கட்சிகள் திண்டாட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply