காஷ்மீரில் தமிழக வாலிபர் மரணம் எதிரொலி: முதலமைச்சர் எடப்பாடி முக்கிய அறிவிப்பு
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழக இளைஞர் திருமணி நேற்று கிளர்ச்சியாளர்களின் கல்வீச்சு தாக்குதலில் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழக சுற்றுலா பயணிகளை பாதுகாப்புடன் தமிழகத்திற்கு அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சுமார் 130 பேர், பாதுகாப்பாக தமிழகம் திரும்ப தேவையான உதவிகளை டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு இல்ல அதிகாரிகளின் தொலைபேசி எண் – 011-24193100, 011-24193200 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
மேலும் காஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த திருமணி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தியிடம், முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள், பாதுகாப்பாக தமிழகம் திரும்பி வருவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.