shadow

எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றம் செய்து ஜெயலலிதா உத்தரவு. பெற்றோர்கள் மகிழ்ச்சி
svs
சமீபத்தில் எஸ்விஎஸ் இயற்கை மருத்துவம், யோகா கல்லூரியில் படித்த மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அந்த கல்லூரி இழுத்து மூடப்பட்டது. அந்த கல்லூரியில் படித்த மாணவர்களின் கதி என்ன என்பது குறித்து அனனவரும் கவலையில் இருந்த நிலையில் அந்த கல்லூரியின் மாணவர்களை, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு மாற்றம் செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த கல்லூரியில் படித்து வந்த மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தில் இயங்கி வரும் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மூன்று மாணவிகள் பிரியங்கா, சரண்யா மற்றும் மோனிஷா ஆகியோரது இறப்பை தொடர்ந்து காவல் துறை வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகிறது.  இறந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  வழங்க ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். தற்போது உள்ளூர் காவல் துறையினரால் புலன் விசாரணை செய்யப்பட்டு வரும் இந்த வழக்கை, எனது உத்தரவின்பேரில், காவல் துறை இயக்குநர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமுதாய  சேவை அறக்கட்டளை  ’யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’,  என்ற பெயரில் கல்லூரி ஒன்றை துவங்கவும், ஆண்டுதோறும் 50 மாணவர்களை சேர்க்கவும், 3.4.2008 அன்று திமுக அரசால்  அனுமதி வழங்கப்பட்டது.  அதன் அடிப்படையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் 26.5.2009 அன்று இக்கல்லூரிக்கு 2008-2009-க்கான தற்காலிக இணைப்பு (Provisional Affiliation) வழங்கியது.  

இதனைத் தொடந்து யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு, 2009-2010-லிருந்து ஆண்டுதோறும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர் தற்காலிக இணைப்பு (Continuous Provisional Affiliation)2014-2015-ம் ஆண்டு வரை வழங்கி வந்துள்ளது.   2015-2016-ஆம் ஆண்டிற்கு இக்கல்லூரி இணைப்புக்கான அனுமதி கோரியுள்ள விண்ணப்பம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பரிசீலனையில் உள்ளது.

இதே அறக்கட்டளைக்கு 50 மாணாக்கர்களுடன் ஒரு ஹோமியோபதி மருத்துவ பட்டப்படிப்பு கல்லூரி தொடங்குவதற்கும் முதற்கட்டமாக 28.2.2011 அன்று தடையில்லா சான்று திமுக அரசால் வழங்கப்பட்டது.  ஆனால், இந்த கல்லூரியின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது. உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில், இந்த அறக்கட்டளைக்கு 28.9.2015 அன்று  மத்திய அரசு புதிய ஹோமியோபதி பட்டப்படிப்பு கல்லூரி தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், உயர் நீதிமன்றத்தின் ஆணைகளின்படி இந்த ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 2014-2015 மற்றும் 2015-2016 ஆண்டுகளுக்கு மாணாக்கர்கள் சேர்க்கைக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அனுமதி வழங்கப்பட்டது.

எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணாக்கர்களின் நலன் கருதியும், அவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற நோக்கிலும், இக்கல்லூரியில் பயின்று வரும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மாணாக்கர்களை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்திட உத்தரவிட்டுள்ளேன். ஹோமியோபதி கல்லூரி மாணாக்கர்களைப் பொறுத்தவரையில், அவர்களை இதர ஹோமியோபதி கல்லூரியில் ஒதுக்கீடு செய்வதற்கு, மத்திய ஹோமியோபதி குழுமம் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படுவதால், அதனை உடனடியாகப் பெற்று, அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு இம்மாணாக்கர்களை மாற்றிட நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளேன்”

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply