shadow

இப்படி செய்தால் யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என முதல்வருக்கு ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டில் இருந்து பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்குகள் வெறிச்சோடி தொடங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களை உதவுகின்றன. அண்ணாத்த மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தது. 50 விழுக்காடு இருக்கை ஆக்கிரமிப்பு என்ற நிலையை மாற்றி 100% இருக்கை ஆக்கிரமிப்பை தந்தது திரையரங்குகளுக்கு பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாக பார்த்தோம் நன்றியோடு!

ஆனால் இப்போது வேக்ஸினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க இன்னும் தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை. 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

உங்கள் ஆட்சியில் தடுப்பூசி செலுத்துவது மிகவும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முககவசம் சனிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்து வருகின்றனர் மக்கள். தடுப்பூசி போடாதவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவும் திரைத்துறையை வெகுவாக பாதிக்கும்.

ஆண்டிராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை சர்டிபிகேட் எடுத்து வரச் சொன்னால் திரையரங்கம் வருவதையே அவர்கள் தவிர்ப்பார்கள். அதுவும் திரையரங்கம் வந்து திரும்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள்.

எனவே தயவுசெய்து 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து திரையுலகையும் திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்