மசூதிகளை மாற்றலாம். கோவில்களை மாற்ற முடியாது. ராமர் கோவில் வழக்கில் சு.சுவாமி வாதம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று ஏற்கனவே ஒரு வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதுடன் ஏற்கெனவே நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைகளிலும் சுப்பிரமணியன் சுவாமியை ஒரு மனுதாரராக பங்கேற்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் வி.கோபால கெளடா, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை செய்தபோது, “இந்த மனுவை மட்டும் தனியாக விசாரிக்க முடியாது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தொடுக்கப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த வழக்கு விசாரணைகளில் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
முன்னதாக, சுப்பிரமணியன் சுவாமி தனது மனு குறித்து வாதம் செய்தபோது, “ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக, மத்திய அரசு ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தால், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல, அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாக, இந்தியத் தொல்லியல் துறையும் ஆதாரங்களை அளித்துள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் தனது மனுவில், “சாலை அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக மசூதிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது இஸ்லாமிய நாடுகளில் வழக்கமான நடைமுறையாக உள்ளது. ஆனால், இந்தியாவில் அதுபோன்ற பணிகளுக்கு கோயில்களை அகற்றும் வழக்கம் கிடையாது. எனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.