shadow

ஃபேஸ்புக் மூலம் கல்லூரி மாணவிகளின் நிர்வாண படங்களை சேகரித்து மிரட்டிய கல்லூரி மாணவர் கைது
facebook
ஃபேஸ்புக்கில் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து அவர்களை மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர் ஒருவர் ஐதராபாத் நகரில் கைது செய்யப்பட்டார்.

அப்துல் மஜீத் என்ற 21 வயது கல்லூரி மாணவர், மலக்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ‘பேஸ் புக்’கில் பெண்கள் பெயரில் போலி பக்கங்களை தொடங்கி அதன்மூலம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பணக்கார மாணவிகளுடன் கடந்த ஒரு வருடமாக பழகி வந்துள்ளார். மேலும் அவர் இளம்பெண்களிடம் காதல் மற்றும் காம உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி அவர்களது நிர்வாண படங்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். பெண் என நினைத்து பல பெண்கள் அவர் கேட்டபடி தங்களது நிர்வாண படங்களை செல்போனில் படம் எடுத்து அனுப்பி உள்ளனர்.

நிர்வாண படங்களை சேகரித்த அப்து, பின்னர் அந்த மாணவிகளிடம் அவர்கள் அனுப்பிய படங்களை வேறொரு ஃபேஸ்புக் கணக்கின் மூலம் காட்டி, இணைய தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் கறந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் அவருக்கு பணம் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட ஜனனி என்ற மாணவி தனது தாயிடம் இந்த விஷயத்தை தைரியமாக கூறியுள்ளார். அவருடைய தாய் ஸ்வேதா பிரபு, தனது மகள் மூலமாகவே அப்துல் மஜீத் பற்றிய விவரங்களை சாட்டிங் மூலம் சேகரித்ததோடு, அவரது மிரட்டல்களை பதிவு செய்தார். தான் சேகரித்த அனைத்து ஆதாரங்களுடன், தனது மகள் ஜனனியுடன் சைதராபாத் போலீஸ் நிலையத்துக்கு சென்று நேரில் புகார் மனு அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்துல் மஜீத்தை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் அப்துல் மஜீத் பல்வேறு பெண்கள் பெயரில் 6 போலி பேஸ்புக் தொடங்கி 200 பெண்களை மிரட்டி பணம் பறித்து உள்ளது தெரிய வந்தது. ஒரு பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சமும், இன்னொரு பெண்ணிடம் இருந்து ரூ.86 ஆயிரமும் பறித்து உள்ளார். அவரது செல்போனில் இருந்து பல்வேறு மாணவிகளின் 80 நிர்வாண படங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் 100–க்கும் மேற்பட்ட நிர்வாண படங்கள் பேஸ்புக்கில் பதிவு செய்து உள்ளார். அந்த படங்களை அப்துல் மஜீத் இணையதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி இருந்தாலும் அவை வெளியாகவில்லை என்று போலீஸ் கமிஷனர் ஆனந்த் கூறினார்.

அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் தயங்காமல் புகார் செய்யலாம் என்று கூறிய போலீசார் அதற்கான செல்போன் எண்களை வெளியிட்டு உள்ளனர். இதுவரை 80 புகார்கள் வந்துள்ளது. கைதான அப்துல் மஜீத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply