shadow

எஸ்.ஆர்.எம் பச்சமுத்து அதிரடி கைது. வேந்தர் மூவீஸ் மதன் வெளியே வருவாரா?

pacha-muthuவேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரத்தில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் நேற்று முதல் விடிய விடிய காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 28ஆம் தேதி வேந்தர் மூவிஸ் மதன் திடீரென மாயமானார். காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் அவர் எங்கிருக்கின்றார் என்றவிபரம் யாருக்கும் தெரியவிலை. இந்நிலையில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மதனிடம் பல லட்சங்களை கொடுத்ததாக 72 பேர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடந்து வருகிறது.

இந்நிலையில் வேந்தர் மூவீஸ் மதன் குறித்தும், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர்களை சேர்க்க பணம் பெற்றதாக கூறப்படும் புகார்கள் குறித்தும் விசாரணை செய்ய பச்சமுத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நேற்று சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பச்சமுத்து ஆஜரானார். அங்கு அவரிடம் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை விடிய, விடிய நடந்தது. அவரிடம் 300க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டது. அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பச்சமுத்துவை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, சைதாபேட்டை நீதிமன்றத்தில் பச்சமுத்துவை ஆஜர்படுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “மதன் தொடர்பாக பச்சமுத்துவிடம் விசாரணை நடந்தது. அவர் அளித்த பதில்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்பிக்கப்படும். அவரிடம் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். மதன், உங்களுக்கு எப்படி அறிமுகமானார் என்ற கேள்வியில் தொடங்கி, பண விவகாரம், வேந்தர் மூவிஸ், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விசாரணைக்குத் தேவையான கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், ஐ.ஜே.கே கட்சி தொடர்பாகவும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் உடனுக்குடன் பதில் அளித்தார். மதன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்று கேட்டதற்கு மிகத் தெளிவாக விளக்கம் அளித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே திண்டுக்கல் ஐஜேகே மாவட்ட செயலாளர் பாபு, திருச்சியை சேர்ந்த டாக்டர் பார்கன் பச்சமுத்து, மதுரையை சேர்ந்த சண்முகம், மதனின் கூட்டாளி சுதீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் சீட் கொடுப்பதாக கூறி ரூ.72 கோடி வரை மோசடி புகார்கள் உள்ளது. அதன்அடிப்படையிலேயே பச்சமுத்துவை நம்பிக்கை மோசடி (406), மோசடி (420), 34 ஐபிசி ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளோம்” என்றார்.

Leave a Reply