தமிழக அரசின் எதிர்ப்பை மீறி இந்தியா மற்றும் இலங்கை இடையே கூட்டு ராணுவ பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி 3 வாரம் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்தியா, இலங்கை ராணுவத்தினரின் கூட்டு ராணுவப்பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆண்டு தமிழக அரசு மற்றும் தமிழக கட்சிகளின் கடும் எதிர்ப்பால் கடந்த ஆண்டு இந்த பயிற்சி நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த பயிற்சியை மீண்டும் தொடங்க கடந்த மாத தொடக்கத்தில் இலங்கை சென்றிருந்த இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.மாத்தூர் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சே ஆகியோர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு கூட்டு ராணுவ பயிற்சியை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இந்த கூட்டு ராணுவ பயிற்சி நேற்று, இலங்கையில் உள்ள உவா–குடவோயா ராணுவ படைத்தளத்தில் தொடங்கியது.
இந்திய ராணுவத்தை சேர்ந்த 40 வீரர்கள் மற்றும் இலங்கையின் 200 வீரர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை கூட்டு ராணுவ பயிற்சிக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.