shadow

பாராளுமன்றம் முற்றுகை. சோனியா காந்தி, ராகுல்காந்த், மன்மோகன்சிங் கைது.

sonijhசமீபத்தில் உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் அரசை மத்திய அரசு கலைத்ததை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பாராளுமன்றத்தை நோக்கி நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை ஏற்றார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளீட்ட பல தலைவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தின் போது சோனியா காந்தி பேசியதாவது: உத்தராகண்டில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. அதை அணைப்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால், உத்தராகண்டிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசை கலைத்து ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆளுங்கட்சி நாட்டின் ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. மத, மொழி, இனம் மற்றும் உணவுப் பழக்கங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டப் பார்க்கிறது. இதனால் பழங்குடியினர், தலித் மக்கள் உட்பட சிறுபான்மையின சமூகத்தினர் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தட்டிக் கேட்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் அடிப்படை ஆதாரமற்ற பொய்யான வழக்குகளை தொடுக்க நினைக்கிறது. அநியாயத்துக்கு முன்பாக தலைவணங்கவும் மாட்டோம். அதைக் கண்டு அஞ்சவும் மாட்டோம். ஏனெனில் எப்படி போராட வேண்டும் என்பதை வாழ்க்கை கற்றுக் கொடுத்துள்ளது. ஜனநாயகத்துக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கும் காங்கிரஸ் தயங்காது.

காங்கிரஸ் பலவீனமான அமைப்பு அல்ல. வரும்காலங்களில் துடிப்பான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் செயல்படும். ஆளுங்கட்சியின் ஆட்சி முறை மோசமாக உள்ளது. அதன் நாட்கள் எண்ணப்பட்டு விட்டன.. பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்’ என்று பேசினார்.

பின்னர் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘‘இந்தியாவின் ஆத்மா காங்கிரஸ். ஜனநாயகத்தை ஆபத்தில் இருந்து காக்கும் பொறுப்பு காங்கிரஸ் தொண்டர்களுக்கு இருக்கிறது. மணிப்பூர், மிசோரம், மேகாலயா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசுகளையும் கவிழ்க்க மத்திய அரசு சதி செய்து வருகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது’’ என்று கூறினார்.

Leave a Reply