shadow

சென்னை தீவுத்திடலில் மே 5-ல் ஒரே மேடையில் சோனியா காந்தி- கருணாநிதி

sonia_gandhiதமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. ஜெயலலிதா, கருணாநிதி உள்பட அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய தலைவர்கள் தமிழகம் நோக்கி பிரச்சாரத்திற்கு வரவுள்ளனர். குறிப்பாக வரும் மே 5ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தி சென்னை வரவுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து அவர் ஒரே மேடையில் பங்கேற்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் அன்றைய தினம் நடைபெற உள்ளது.

மே-5 ஆம் தேதி தீவுத்திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், கருணாநிதியும் ஒன்றாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர். இந்நிலையில் திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, ராயபுரம் மனோ, கராத்தே தியாகராஜன் ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள தீவுத்திடல் பகுதியை நேற்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், ‘சோனியாவும், கருணாநிதியும் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அனைத்து வேட்பாளர்களும் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்படுவர். சென்னை பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் அன்றைய தினமே சோனியா காந்தி புதுச்சேரியிலும் பிரச்சாரம் செய்கிறார்’ என்று கூறினார்

Leave a Reply