உ.பி.யில் முசாபர்நகரில் சமீபத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 48 பேர் பலியாயினர். 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில், மீரட்டில் மீண்டும் கலவரம் வெடித்தது. முசாபர்நகர் கலவரத்துக்கு காரணமாக இருந்ததாக கைதான பா.ஜ. எம்.எல்.ஏ. சங்கீத் சாம் என்பவர்மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
இதை கண்டித்து போலீசார் தடையை மீறி மீரட்டில் கேரா என்ற கிராமத்தில் பள்ளி மைதானத்தில் நேற்று பா.ஜ. சார்பில் மகாபஞ்சாயத்து மாநாடு நடந்தது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினர் திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்கினர். வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கல்வீச்சு மற்றும் தடியடியில் பலர் காயமடைந்தனர். 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.