மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கி கடன் கொடுக்கும்: சக்திகாந்த் தாஸ் தகவல்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்திய பொருளாதாரம், இந்திய பங்குச்சந்தை ஆகியவை படுமோசமாக சரிந்துள்ள நிலையில் சற்றுமுன் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த் தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது. அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது. ஆட்டோ மொபைல் தயாரிப்பு, விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணிப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால்.
கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது. உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. 2021-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது; இது ஜி-20 நாடுகளில் அதிகம்
Leave a Reply
You must be logged in to post a comment.