டெல்லி மருத்துவக்கல்லூரி பாலியல் பலாத்கார குற்றவாளியான முகேஷ் சிங்கின் வங்கிக்கணக்கில் பிபிசி நிறுவனத்தின் ஆவணப்பட தயாரிப்பாளர் ரூ.40 ஆயிரம் பணம் வரவு வைத்துள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
‘இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை பிபிசியின் பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வீன் தயாரித்தார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் திகார் சிறையில் இருக்கும் குற்றவாளி முகேஷ் சிங்கை பேட்டியெடுக்க உத்வின் பலமுறை முயன்றதாகவும், ஆனால் முகேஷ் சிங் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே பேட்டி கொடுக்க முடியும் என பேரம் பேசியதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
பின்னர் இடைத்தரகர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.40 ஆயிரம் பணத்தை முகேஷ் சிங்கின் வங்கிக்கணக்கில் பிபிசி வரவு வைத்ததாகவும், அதன்பின்னரே முகேஷ் சிங் பேட்டியளித்ததாகவும் கூறப்படுகிறது.
முகேஷ் சிங்கின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட அந்த பணத்தை அவரது குடும்பத்தில் எடுத்து செலவழித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.