சாம்பியன்ஸ் லீக் 20-20ல் நேற்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான்-சென்னை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் குவித்தது. ரகானே 56 பந்தில், 2 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன் விளாசினார். வாட்சன் 23 பந்தில், 4 பவுண்டரியுடன் 32 ரன்னும், கூப்பர் 14, சாம்சன், ஹாட்ஜ் தலா 11, பின்னி 5 ரன் எடுத்தனர்.

சென்னை தரப்பில் பிராவோ 3, மோரிஸ், ஹோல்டர் தலா 2, மோகித் சர்மா 1 விக்கெட் கைப்பற்றினர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை பேட் செய்தது. ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஹசி 9, முரளி விஜய் 14 ரன்களில் ரன்அவுட் ஆனார்கள். சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரெய்னா 23 பந்தில் 4 பவுண்டரியுடன் 29 ரன் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

பத்ரிநாத் 8, டோனி 3, பிராவோ 3, ஜடேஜா 2 ரன்களில் வரிசையாக நடையை கட்டினர். கடைசி கட்டத்தில் அஸ்வின், மோரிஸ் ஜோடி அதிரடி காட்டியது. எனினும் அது வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. அஸ்வின் 28 பந்தில் தலா 3 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 46 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் சென்னை அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. பிரவீன் தாம்பே 3, பால்க்னர், வாட்சன், சுக்லா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது பிரவீன் தாம்பேவிற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply