தனிக்கட்சி தொடங்குகிறாரா ராகவா லாரன்ஸ்: பெரும் பரபரப்பு
ரஜினி பட விழா ஒன்றில் கமல்ஹாசன் மற்றும் சீமான் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதில் இருந்தே அவருக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதுவரை ராகவாவை மட்டும் விமர்சனம் செய்து வந்த நெட்டிசன்கள் தற்போது அவரது பெற்றோர் குறித்தும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். இதனையடுத்து அதிரடி முடிவெடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்!
இதுவரை என்னைத்தான் தவறாக பேசிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது தாய் தந்தையரைப் பற்றியும் மிக தவறாக பேசுகிறார்கள்! மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக்கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்!
நான் ஒரு தனி மனிதன்!
எனக்கென்று தனிக் கூட்டமில்லை!
நான் படிக்காதவன்!
ஒரு தனி மனிதனாய் நின்று…..
*” அன்புதான் தமிழ்”*
என்கிற,
அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன்! இந்த அமைப்பின் மூலம்,
தமிழரின் மாண்பையும்,
தமிழரின் பண்பையும்,
தமிழரின் அன்பையும்,
உலகறிய செய்வதே அதன் நோக்கம்!
“இன்னார் செய்தாரை ஒருத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்!” என்பது திருக்குறள் அதை பின்பற்றியே…
“எதிரிக்கும் உதவி செய்!
பிறர் துன்பங்களை உன் துன்பமாக நினை!
நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு!
உள்ளத்தால் ஒன்றே!
கடவுளை வெளியே தேடாதே!
உனக்குள் இருக்கிறார்!
எனக்கு இது போதும் என்று நினை!
ஆசையை விடு!
அள்ளிக்கொடி!
ஆண்டவன் உன் பக்கம்!”
அந்த ஆண்டவன் இருப்பது உண்மையானால்….
தர்மம் இருப்பது உண்மையானால்…
என்வழி உண்மையானால்…
நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு
இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கட்டும்!
இறுதியாக ஒன்று….
“என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும்,
அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும்,
நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்…!
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.