shadow

பேரறிவாளன் உள்பட 7 பேர்களை விடுவிக்க முடியாது: ஜனாதிபதி அறிவிப்பு

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை வகித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பரிசீலித்து அதன்பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையான 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டார். இந்த தகவலை அவர் தமிழக அரசுக்கும் முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார். மத்திய அமைச்சர்களின் ஆலோசனையை அடுத்தே ஜனாதிபதி இந்த முடிவை அறிவித்ததாக தெரிய வருகிறது.

இதன் காரணமாக பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தற்போது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. ஜனாதிபதி உத்தரவை மீறி சுப்ரீம் கோர்ட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலை இருப்பதால் 7 பேர் விடுதலையாக வாய்ப்பு இல்லை என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply