shadow

RedGram1-350x250

உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டதும், மூல நோய்க்கு மருந்தாக பயன்படக் கூடியதும், ஈரலுக்கு பலத்தை கொடுக்க வல்லதும், பல் வலியை குணப்படுத்த கூடியதும், சத்தான உணவாக இருப்பதுமான துவரை முக்கிய உணவு பொருளாக உள்ளது.

துவரம் பருப்பு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. துவரை காய்களின் உள்ளே இருக்கும் பருப்பை உலர்த்தி உடைத்து அதை சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். துவரை செடியானது உயரமாக வளரக் கூடியது. மஞ்சள் நிற பூக்களை உடையது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட துவரை, கொழுப்பு சத்தை குறைக்கும். உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. சத்துக்கள் நிரம்பிய துவரை, உடல் எடையை குறைக்கும் தன்மை உடையது.

துவரை செடியின் வேரை பயன்படுத்தி மூலத்தினால் உண்டாகும் சதை வளர்ச்சியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வேரை சிறு துண்டுகளாக வெட்டி சுத்தப்படுத்தி எடுத்து கொள்ளவும். அதனுடன், அரை ஸ்பூன் சோம்பு, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதனால் மலச்சிக்கல் சரியாகும். உள் மற்றும் வெளி மூலம் ஆகியவை குணமாகும்.

துவரை இலைகளை பயன்படுத்தி பல் வலி, ஈறு வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். ஒருபிடி அளவுக்கு துவரை இலைகளை எடுத்து கொள்ளவும். அதனுடன், சிறிது மிளகுப் பொடி, சிறிது உப்பு சேர்த்து, நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இதை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், பல் வலி சரியாகும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம், ரத்தக் கசிவு குணமாகும்.துவரம் பருப்பை பயன்படுத்தி பசியை தூண்டக் கூடியதும், மலச்சிக்கல் இல்லாமல் குடலை பாதுகாக்க கூடியதுமான சூப் தயாரிக்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு, உப்பு, சீரகப் பொடி, மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி.வேக வைத்து மசித்த துவரம் பருப்பை 2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதனுடன், 2 சிட்டிகை பெருங்காயப் பொடி, சிறிது மிளகுப் பொடி, சிறிது சீரகப் பொடி, உப்பு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு சூப்பு போன்று தயாரிக்கவும். இதை குடித்துவர மலச்சிக்கல் சரியாகும்.

அஜீரண கோளாறுகள் குணமாகும். சுவையான சத்துக்கள் நிறைந்த துவரம் பருப்பு, ரத்த குறைபாட்டை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும். துவரை இலைகள் பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கும். வேர்கள் மூலத்தை குணப்படுத்த கூடியது. துவரம் பருப்பை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் வயிற்று புண்கள் ஆறும். ஈரல் கெட்டுப்போகாமல் தடுப்பதுடன், அதற்கு பலம் கொடுக்கிறது. துவரம் பருப்பை பயன்படுத்தி வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.

Leave a Reply