ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா குற்றச்சாட்டு
கடந்த 50 ஆண்டுகளாக ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்வதாகவும், இது அல்ல மாற்று அரசியல் என்றும் கூறி ஒரு நீண்ட அறிக்கையை விளக்கமாக தெரிவித்து பழம்பெரும் அரசியல்வாதி பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் திமுகவில் செல்வதில் எனக்கு தயக்கம் இருந்தது. ஒரு பொது விழாவில் கலைஞர் மிகைபடச் சொன்னாரோ என எண்ணுமளவுக்கு என்னை வலியுறுத்தி அழைத்தார். கலைஞர் மறைந்த அன்று திமுகவை விட்டு வெளியேறுவது குறித்து சிந்தித்தேன். ஆனால் பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புணர்வு, நாடாளுமன்றத் தேர்தல் என இவற்றின் காரணமாக அந்த முடிவு தள்ளிப் தள்ளிக்கொண்டே இருந்தது.
கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனை பங்குகள், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் கட்சியை நடத்தும் விதம், அறிவும் நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என்று கருதுகின்ற தன்மை இவையெல்லாம் என்னிடம் பெரிய மன சலிப்பையும் உண்டாக்கி இருந்தன. இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவை விட்டு ஒதுங்கிக் கொள்வது என்றும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது என்றும் முடிவெடுத்தேன். நேரடியாக ஸ்டாலினை பார்த்து விடை பெற்றேன்
ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலை பொது வாழ்வின் அங்கமாக ஏற்பது, கட்சிக்குள்ளேயே விமர்சிக்க முடியாதவாறு கட்சி விசுவாசம் என்னும் பெயரால் அவற்றை நிலைநாட்டுவது இவையெல்லாம் எந்த வகையிலும் பொதுவாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல.
மாநிலங்களை பல கூறுகளாக உடைப்பது, இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்திற்கு கொண்டுவருவது, இவையெல்லாம் மொழிவழி இன உணர்வை சிதைக்கின்ற போக்குகள் ஆகும். இதில் உள்ள ஆபத்தை திமுக சரியாக புரிந்து கொண்டு இருக்கிறது என்று என்னால் கருத முடியவில்லை. வெறும் ஒரு ஒருநாள் அறிக்கைகளோடு எல்லாம் முடிந்து விடுபவை அல்ல
கடந்த 50 ஆண்டுகளாக ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது. இது அல்ல மாற்று அரசியல் என்னும் கருத்தே என்னுடைய விலகலுக்கான காரணம் ஆகும். இவ்வாறு பழ கருப்பையா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.