கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி, 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய கரன்ஸி நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்தது. அதன்படி நாடு முழுவதிலும் புழங்கி வரும் பழைய கரன்ஸிகளை வங்கிகளில் திரும்ப செலுத்தி புதிய கரன்ஸிகளை பெற்றுக்கொள்ளும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த ஜனவரி மாதம் வரை கொடுக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அது ஜூன் 30 வரை என மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது அந்த காலக்கெடு முடிய இன்னும் சில நாட்களே இருப்பதால், அந்த குறிப்பிட்ட தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் பழைய கரன்ஸி நோட்டுக்களை கொடுத்து மாற்றிக்கொள்ளும்படி மீண்டும் ஒருமுறை ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளது.
2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட கரன்ஸியை அடையாளம் கண்டுபிடிப்பது மிக எளிது. 2005-ம் ஆண்டு முதல் கரன்ஸி அச்சடிக்கும்போது அதில் வருடம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு முந்தைய கரன்ஸிகளில் வருடம் குறிப்பிட்டிருக்காது.
2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட 164 கோடி கரன்ஸிகள் ரிசர்வ் வங்கிக்கு வந்திருக்கிறது. இதன் மதிப்பு 21,750 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. 88.87 கோடி 100 ரூபாய் கரன்ஸி, 56.19 கோடி 500 ரூபாய் கரன்ஸி மற்றும் 21.75 கோடி 1,000 கரன்ஸி ஆகியவை ரிசர்வ் வங்கிக்கு வந்திருக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.