shadow

அணு ஆயுத சோதனையை நிறுத்த வடகொரியா விதித்த புதிய நிபந்தனை
north korea
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைட்ரஜன் குண்டுகளையும், அவ்வப்போது அணுகுண்டுகளையும் சோதனை செய்து வரும் வடகொரியா, உலக நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக்கொள்ள வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அணு ஆயுத சோதனையை நிறுத்த வேண்டுமெனில் அமெரிக்கா, தென்கொரியா இடையிலான கூட்டு ராணுவ பயிற்சியை நிறுத்த வேண்டும் என்றும் தங்களுடன் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட வேண்டும் என்றும் வடகொரியா புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத வடகொரியாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ‘‘வடகொரியாவின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெளிநாடுகளின் இந்த அச்சறுத்தலை சமாளிக்கவும், நாட்டை தற்காத்துக் கொள்ளவுமே அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறோம். சிந்திக்காமல் ஒரு போதும் அதை பயன்படுத்தமாட்டோம். தவிர வடகொரியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தென்கொரியா தொடங்கி இருப்பதும் இருநாட்டுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

வடகொரியாவின் நிபந்தனையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா? என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply