shadow

metro trainசென்னையில் விரைவில் தொடங்க இருக்கும் மெட்ரோ ரயிலில் சலுகைகளுடன் கூடிய சீசன் டிக்கெட் கிடையாது என்றும், குறைந்தபட்ச டிக்கெட் ரூ.10ஆகவும், அதன்பின்னர் ரூ.15, ரூ.20, ரூ.25 என டிக்கெட்டுக்கள் வசூல் செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.

ரூ.20,000 கோடியில் சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் இருவழித்தடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குளூகுளு வசதியுடன் கூடிய இந்த ரயிலில் டிக்கெட் கட்டணங்கள் குறித்த அறிவிப்புகளை இன்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி வெளியிட்டார்.

மெட்ரோ ரயிலில் புதிய அறிமுகமாக டோக்கன் டிக்கெட், ஸ்மார்ட் கார்டு திட்டம் ஆகிய இருவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி டோக்கன் டிக்கெட்” பெற்று கொண்டு, நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி இயந்திரத்தில் தேய்த்தால், தானியங்கி வாசல் திறக்கும். உள்ளே போய் ரயிலில் ஏறிக்கொள்ளலாம். எந்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டுமோ அங்கே இறங்கி, வெளியேறும் பாதையில் உள்ள இயந்திரத்தில் அந்த டோக்கனை போட்டால், தானியங்கி வாசல் திறக்கும். பிறகு அதன் வழியே வெளியே செல்லலாம். டோக்கன் டிக்கெட்டை யாரும் வெளியே எடுத்துச் செல்ல முடியாது.

 இரண்டாவது வகை டிக்கெட், ‘ஸ்மார்ட் கார்டு’ என்பதாகும். உதாரணத்துக்கு ரூ.200 கொடுத்து ஸ்மார்ட் கார்டு வாங்குபவர்கள், மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழையும்போது அங்கே இருக்கும் ‘ஆட்டோமேட்டிக் ஃபேர் கலெக் ஷன்’ (AFC) மிஷினில் ஸ்மார்ட் கார்டைத் தேய்க்க வேண்டும். வாசல் திறந்ததும் உள்ளே போய் மெட்ரோ ரயிலில் ஏறி பயணம் செய்யலாம். எந்த ரயில் நிலையத்தில் அவர் இறங்குகிறாரோ அங்கிருந்து வெளியே செல்லும் போது அங்குள்ள ‘ஆட்டோமேட்டிக் ஃபேர் கலெக் ஷன் மிஷினில் ஸ்மார்ட் கார்டை’ தேய்த்துவிட்டு வெளியேற வேண்டும். அப்போது அவர் எந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறி, எங்கு இறங்கினாரோ அதற்கான கட்டணம் தானியங்கி முறையில் ‘ஸ்மார்ட் கார்டு’ தொகையில் இருந்து கழிக்கப்படும். இதற்காக பிரத்யேக சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சாப்ட்வேரின் வெற்றியை பார்த்தபின்னர், இதே முறை மாநகர பேருந்துகளிலும் அமல்படுத்தப்படும்.

Leave a Reply