shadow

nee naan nizhalகோவையில் எம்.எஸ்.பாஸ்கர் நடத்திவரும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் மியூசிக் பேண்டு வேலை பார்த்து  வருகிறார் ஹீரோ அர்ஜூன் லால். இவருக்கு பேஸ்புக்கில் ஆஷா பிளாக் என்கிற பெண்ணின் பெயரில் இருந்து பிரண்ட்ஸ் ரிக்யூஸ்ட் வருகிறது. ரோஹித்தும் அந்த அழைப்பை ஏற்று அவளுடன் இண்டர்நெட்டில் சாட் மூலம் பேச ஆரம்த்து பின்னர் பழகுகிறார்.

தினமும் பலமணி நேரம் சாட் மூலம் பேச ஆரம்பிக்கும் அர்ஜூன் லால், நாளடைவில் அவளுக்கு அடிமையாகிறார். நாள் முழுவதும் ஆஷாவிடம் பேசுவதால் தன் நண்பர்கள் மற்றும் மியூசிக்கில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. நண்பர்களும் யார் என்று தெரியாத ஒரு பெண்ணிடம் இப்படி பேசாதே என்று அறிவுரை கூறுகிறார்கள்.

ஆனால் அர்ஜூன் லால் அவளுடைய முகத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். பின்னர் ஆஷாவிடம் பலமுறை கெஞ்சி போட்டோவை அனுப்பும்படி கேட்கிறான். ஆஷா போட்டோ அனுப்ப முடியாது வேண்டுமென்றால் வீடியோகால் மூலம் பேசலாம் என்று கூறுகிறார். இதை ஏற்கும் அர்ஜூன் லால் வீடியோகாலுக்காக காத்திருந்து ஆஷாவை பார்க்கிறான். ஆஷாவின் அழகில் மயங்கிய அர்ஜூன் லால்உடனே மலேசியா சென்று நேரடியாக அவளை சந்திக்க முடிவு செய்கிறான். முதலில் மறுக்கும் ஆஷா பிறகு அர்ஜூன் லால் கட்டாயத்தால் சந்திக்க சம்மதிக்கிறார்.

இந்நிலையில் மலேசியாவில் தொடர்ச்சியாக ஐந்து  கொலைகள் நடக்கிறது. இந்த கொலைகளுக்கான காரணத்தை அறிய முயற்சி செய்து வருகிறார் அந்நாட்டு போலீஸ் அதிகாரியான அன்வர் (சரத்குமார்). அவருடைய தீவிர விசாரணையில் இந்த ஐந்து கொலைகளிலும் ஆஷா பிளாக் என்னும் பெண் சம்பந்தப்பட்டு இருப்பதாக அறிகிறார். அவள் தான் இந்தக் கொலைக்கு காரணம் என்று முடிவு செய்து அவளை தேடுகிறார்.

இந்நிலையில் மலேசியாவிற்கு சென்ற அர்ஜூன் லால், ஆஷாவை சந்தித்தாரா? போலீஸ் அதிகாரியான அன்வர் தேடிவரும் ஆஷாவை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சரத்குமார், போலீஸ் அதிகாரியான அன்வர் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். துப்பறியும் காட்சிகளிலும், தன் குழந்தை மீது அக்கறை காட்ட முயற்சிப்பதும் அருமை. ஆனால் இவர் பாணியில் ஒரு சண்டைக்காட்சி கூட இல்லை என்பதுதான் வருத்தம்.

ரோஹித்தாக நடித்திருக்கும் அர்ஜூன் லால், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். ஆஷாவை காதல் செய்யும் காட்சிகளும், அவளுக்காக ஏங்குவது உள்ள காட்சிகளில் நடிப்பில் அருமை. ஆஷா பிளாக் என்னும் கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் இஷிதா, அழகில் ரசிகர்களை கவர்கிறார். நடிக்க வாய்ப்புகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்.

மலேசியாவை அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் நஸீர். ஜெசின் ஜார்ஜ் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. இவரின் இசையில் இரண்டு பாடல்களை ரசிக்கலாம். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

இன்றைய இளைஞர்கள் சமூக வலை தளங்களை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கதை எழுதி இயக்கிய ஜான் ராபின்சன்னை பாராட்டலாம். இன்றைய வாழ்க்கையில் பேஸ்புக் என்பது மிகவும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற சாதனமாகிவிட்டது. இந்த பேஸ்புக் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுவது போலவே, மோசமான விஷயங்களுக்கும் பயன்படுகிறது என்பதை திரைக்கதையாக அமைத்து ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘நீ நான் நிழல்’ நிஜம்.

Leave a Reply