shadow

ஜெயலலிதா கொடுத்த காரை திரும்ப ஒப்படைத்த நாஞ்சில் சம்பத். திமுகவில் இணைவாரா?

மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தபோது, அவருக்கு விலைமதிப்புள்ள புதிய இன்னோவா காரை ஜெயலலிதா வழங்கினார். மேலும் அவருக்கு கட்சியின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் அளித்த ஒரு சர்ச்சைக்குரிய பேட்டி காரணமாக அப்பதவியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். இருப்பினும் கட்சியில் அவர் தொடர்ந்து பணியாற்றினார்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலாவின் தலைமையை அவர் ஏற்று கொள்ள தயங்கியதாகவும், இதனால் அவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகம் வந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை திரும்ப ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார். மேலும் அதிமுகவில் தொடர்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் விரைவில் தன்னுடைய முடிவை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply