தனது திருச்சி பேச்சில் தமிழக அரசின் செயல்பாடுகளையும், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையையும், துணிச்சலான செயல்பாடுகளையும் பற்றி நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏமாற்றம் அளித்துள்ளதாக அதிமுகவினர் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
திருச்சியில் நடந்த இளந் தாமரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, தமிழக அரசு குறித்தோ, முதல்வர் ஜெயலலிதா குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, தமிழர்களைத்தான் அவர் வெகுவாக உயர்த்திப் பேசினார், புகழ்ந்து பேசினார். தமிழர்களின் கடின உழைப்பு, சோர்வறியாமல் உழைக்கும் தன்மை உள்ளிட்டவற்றை அவர் புகழ்ந்து பேசினார். மோடியின் பேச்சால் அதிமுகவினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனராம். பலர் வெளிப்படையாகவே இதுகுறித்து புலம்பி வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் சந்தித்துள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் குறித்தும் அவர் பேசாதது ஏமாற்றமாக இருக்கிறது.

அம்மாவின் நண்பரா இப்படி…

முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல நண்பர் மோடி. அப்படி இருந்தும், தமிழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் எங்களது தலைவி குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன் என்று தெரியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அதிமுக ஜெயலலிதா மட்டுமல்லாமல், திமுக கருணாநிதி குறித்தும்தான் மோடி நேற்று பேசவில்லை. லோக்சபா கூட்டணிக்கு வசதியாக இருக்கும் வகையிலேயே யாரையும் பற்றிப் பேசாமல் மோடி விட்டுவிட்டார் என்று இதற்குக் காரணம் கூறப்படுகிறது.

பல மொழிகளில் பேசிய மோடி…

இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் கேரளா மற்றும் தமிழகத்தில் பேசிய மோடி பல மொழிகளில் பேசி கலக்கி விட்டார். கேரளாவில் நடந்த கூட்டத்தி்ல அவர் மலையாளத்தில் 5 நிமிடம் பேசி அசத்தினார். தமிழகக் கூட்டத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ் என கலந்து கட்டி அடித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் இணைத்து போஸ்டர் வெளியிட்டிருப்பது குறித்து நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை என்று ரஜினிகாந்த்தின் மனைவி லதா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த மோடி கூட்டத்திற்கு முன்பாக ரஜினியையும், மோடியையும் இணைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. மேலும் ரஜினியே நேரில் வந்து மோடியைப் பார்க்கப் போகிறார் என்றும் வதந்தி கிளப்பி விட்டனர். தமிழக பாஜக தலைவர்களும் தொடர்ந்து ரஜினி, எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வாய் வலிக்க பேசி வருகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ரஜினி குடும்பத்திலிருந்து முதல் முறையாக ஒரு கருத்து வெளியாகியுள்ளது

நாங்கள் என்ன சொல்வது- லதா ரஜினி

ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இதுகுறித்து கூறுகையில், இதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள்தான் போஸ்டர் போட்டுள்ளனர். இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் லதா.

Leave a Reply