shadow

டிரம்பின் அதிரடி கொள்கையால் ஃபேஸ்புக் மூடப்படுமா? அதிர்ச்சி தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார் என்றதுமே பலரது வயிற்றில் புளியை கரைத்தது. காரணம் அவரது வெளியுறவு கொள்கைதான். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர்களை வெளியேற்றுவதில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

டிரம்பின் இந்த கொள்கை குறித்து பல வெளிநாட்டு தலைவர்களே நேரடியாக கருத்து சொல்லாத நிலையில் முதல்முறையாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் டிரம்பின் கொள்கையை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘எனது மூதாதையர்கள் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் போலந்திலிருந்து வந்தவர்கள். பிரிசில்லாவின் பெற்றோர் சீனா மற்றும் வியட்நாமிலிருந்து வந்த அகதிகள். அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் உருவான நாடு. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

என்னை போல பலரும் அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவு பற்றி எண்ணி கொண்டிருப்பீர்கள். இந்த நாட்டை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களையும் அடையாளம் காண வேண்டும். அதற்காக மில்லியன் கணக்கில் உள்ள பதிவுசெய்யப்படாத புலம்பெயர்ந்த மக்களை பயத்தில் ஆழ்த்துவது நியாமல்ல.

நாம் அகதிகளுக்கு உதவுவதற்காக நம் நாட்டின் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும். அப்படியில்லை என்று முன்பு யாராவது கூறியிருந்தால் இன்று பிரிசில்லாவின் குடும்பம் இங்கு இருந்திருக்காது. அதனால் இந்த நாட்டில் சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் குடியேறியவர்களை கவனத்தில் கொண்டு, அதுபோல் உள்ள 7.5 லட்சம் பேரை இந்த நாட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பை அதிகரிக்க ட்ரம்ப் மற்றும் அவரது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்களும் உதவ தயாரக இருக்கிறோம்.

இந்த நாட்டில் உள்ள திறமையான மக்களால் அரசுக்கு நன்மை அதிகம் என்பதை அதிபர் ட்ரம்ப் நம்ப வேண்டும். இந்த விஷயங்கள் எனது குடும்பம் என்பதை தாண்டி என்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்தன. சில காலங்களுக்கு முன்னால் ஒரு பள்ளியில் பாடம் எடுக்க சென்றிருந்தேன். அங்கு மிக திறமையுள்ள மாணவர்கள் பதிவு செய்யப்படாத புலம் பெயர்ந்த மக்கள். அவர்கள் தான் அமெரிக்காவின் எதிர்காலம். மீண்டும் கூறி கொள்கிறேன் அமெரிக்கா புலம்பெயந்தவர்களால் ஆன நாடு. உலகின் திறமையானவர்கள் வாழ விரும்பும் நாடு. அவர்களது வேலை மற்றும் பங்களிப்பை இந்த நாட்டுக்காக அளிக்கின்றனர். அமெரிக்காவை உலகில் வாழ மிகவும் தகுதியான இடமாக மாற்றுவோம்’’

இவ்வாறு ஃபேஸ்புக் உரிமையாளர் கூறியுள்ளார்.

மார்க் இந்த அளவுக்கு டிரம்பை விமர்சனம் செய்வதற்கான காரணம் இவரது நிறுவனத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்களே பணிபுரிகின்றனர். ஒரே நேரத்தில் டிரம்ப் கொள்கையால் அவர்கள் வெளியேற்றப்பட்டால் ஃபேஸ்புக் நிறுவனம் முடங்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply