ஸ்மார்ட்போனுக்கு திருமணம் செய்து வைத்த அமெரிக்க பாதிரியார்
ஸ்மார்ட்போன் வந்ததில் இருந்து பெரும்பாலான இளைஞர்கள் சாப்பாடு, தூக்கத்தை கூட மறந்து ஸ்மார்ட்போனிலேயே மூழ்கியுள்ளனர். சிலசமயம் இந்த ஸ்மார்ட்போனால் விவாகரத்து கூட நடைபெறுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஸ்மார்ட்போனையே திருமணம் செய்திருக்கலாமே என்று விளையாட்டாக சொல்வதுண்டு. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் உண்மையிலேயே ஒரு ஸ்மார்ட்போனை திருமணம் செய்துள்ளார்.
லாஸ் வேகஸ் நகரத்தை சேர்ந்த ஆரோன் சேர்வேனக் என்பவர் சமீபத்தில் தனது ஸ்மார்ட்போனை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். சர்ச் ஒன்றில் நடந்த இந்த திருமண நிகழ்சியில் பாதிரியார் ஒருவர் முறைப்படி அவருக்கு ஸ்மார்ட்போனுடன் திருமணத்தை நடத்தி வைத்தார்.
கிறிஸ்த்துவ வழக்கப்படி பாதிரியார் ஆரோனிடம் “ இந்த ஸ்மார்ட்போனை சட்டப்படி உங்கள் மனைவியாக ஏற்றுகொள்கிறீர்களா? நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை நேசிப்பீர்கள் என்றும், மரியாதை அளிப்பீர்கள் என்றும், ஆறுதலாக இருப்பீர்கள் என்றும் சத்தியம் செய்ய தயாரா? என்று கேட்டார். இதற்கு ஆரோன் ’ஆமாம்’ என்று பதில் அளித்தார்.
இந்த திருமணம் குறித்து ஆரோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனை அதிகமாக நேசிக்கிறார்கள். காலை கண் விழிப்பதில் ஆரம்பித்து இரவு தூங்க செல்வது வரை ஸ்மார்ட்போன் கூடவே இருக்கிறது.
என் ஸ்மார்ட்போனுடன் எனக்கு நீண்ட நாள் உறவு உள்ளது. நமது போனுடன் உணர்ச்சிகரமான உறவை கொண்டுள்ளோம். நமக்கு ஆறுதலும், அமைதியும் அளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் உள்ளது. இது கிட்டதட்ட ஒரு மனித உறவு போன்றதுதான்” என்று கூறியுள்ளார். மத முறைப்படி பாதிரியார் இந்த திருமணத்தை நடத்தி வைத்தபோதிலும் இந்த திருமணம் சட்டப்படி அங்கிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.