shadow

250px-மதுரைவீரன்_கடவுள்

சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டம். காசிராஜன்-செண்பகவல்லி என்னும் அரச தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லை. இதனால் மன வேதனையுற்ற காசிராஜன் சிவன்-பார்வதியை வேண்டித் தவமிருந்தார். சிவனும் பார்வதியும் நேரில் தோன்றி மன்னனுக்கு குழந்தை வரம் தந்தனர். அந்த வரம் அளிக்கும் போது சிவபெருமான், சுந்து வீரன், சந்திவீரன், ஆகாசவீரன், உச்சிவீரன், உரிமைவீரன், ஏமவீரன், காமவீரன் ஆகிய ஏழு வீரர்களும் சேர்ந்து உனக்கு ஒரு குழந்தையாகப் பிறக்கும் என வரமளித்தார். வரம் பெற்ற மகிழ்ச்சியில் காசிராஜன் நாட்டு மக்களுக்கு தான தர்மங்களை வாரி வழங்கினான். பத்து மாதங்கள் கடந்து காசிராஜன் மனைவி செண்பகவல்லிக்கு தெய்வீக லட்சணம் பொருந்திய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் தனது ஆஸ்தான ஜோதிடர்களான பிராமணர்களை வரவழைத்த காசிராஜன், குழந்தையின் பிறந்த நேரத்தைப் பார்த்து ஜாதகத்தை எழுதி, அதன் பலாபலன்களைச் சொல்லுமாறு கேட்டார். அதன்படி  குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் குழந்தையின் கிரக பலன்களின் படி பிராமணர்களின் வம்சத்தை வேரறுக்க வந்து பிறந்துள்ளான் என்பதை அறிந்தனர். இதனால் பிராமண ஜோதிடர்கள் தங்களுக்குள் கலந்து பேசிய பிறகு மன்னரிடம் திரிக்கப்பட்ட ஒரு கதையைச் சொன்னார்கள். மாலை சுற்றிப் பிறந்த இந்த குழந்தையால் மன்னனுக்கு ஆகாது. கொடி சுற்றிப் பிறந்த இந்தக் குழந்தையால் கோட்டைக்கும் ஆகாது; கோத்திரத்திற்கும் ஆகாது என்று அவர்கள் சொல்ல, மன்னனும் அவரது மனைவியும் மனம் கலங்கிப் போனார்கள். என்ன செய்யலாம்? என மன்னன் அந்த ஜோதிடர்களிடமே கேட்டு, அவர்களின் ஆலோசனைப்படி குழந்தையைக் காட்டில் கொண்டு போய் வீசிவிட்டு வருமாறு உத்தரவிட்டான். தவமிருந்து பெற்ற பிள்ளையைப் பிரிய மனமில்லாமல் துடிதுடித்து அழுதாள் மன்னன் மனைவி செண்பகவல்லி. வீரர்கள் ஒரு தங்கத் தாம்பாளத்தில் குழந்தையை வைத்து, ஒரு வீரி மரத்தின் கீழே புற்றின் அருகே வைத்து விட்டு வந்துவிட்டனர். அதே வேளையில் கோனேரிபட்டினம் (தற்போதைய கோனேரிபாளையம்-பெரம்பலூர் அருகில் உள்ளது) என்ற பகுதியை பொம்மன நாயக்கர் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். அவரிடம் சின்னான் என்ற (அருந்ததியர்) வீரர் பணியாளராக வேலை செய்து வந்தார். அப்போது பொம்மன நாயக்கரின் பட்டியில் இருந்த இரண்டு மாடுகள் இறந்து போயின. அதன் தோலை உரித்து குதிரைகளுக்கு அங்குசம், கடிவாளம் போன்றவற்றைச் செய்யச் சொல்லி பொம்மன நாயக்கர் சின்னானுக்கு உத்தரவிட்டார்.

வீட்டுக்கு வந்த சின்னான் தன் மனைவி சின்னாத்தியிடம் காட்டுக்குச் சென்று ஆவாரம் பட்டைகளை வெட்டி வருமாறு கூறினார். அதன் படி காட்டுக்குச் சென்ற சின்னாத்தி ஆவாரம் பட்டைகளை சேர்த்துக் கட்டிக்கொண்டிருக்கும் போது, அந்த நடுக்காட்டில் ஒரு குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. இந்த அத்துவானக் காட்டில் குழந்தையின் அழுகுரலா என்று சுற்றும் முற்றும் பார்த்த சின்னாத்தி, அழுகுரல் கேட்ட திசை நோக்கி ஓடினாள். கொஞ்ச தூரத்திலேயே வீரி மரத்தடியில் புற்றுக்கு முன்பாக தங்கத் தாம்பாளத்தில் குழந்தை மின்னியது. அந்தக் குழந்தைக்கு நிழலாக நாகம் படமெடுத்து நிற்க, புலி குழந்தைக்கு பால் கொடுக்க முயல, மான்களும் முயல்களும் அங்கும் இங்கும் ஓடி குழந்தைக்கு விளையாட்டு காட்ட இப்படிப்பட்டக் காட்சிகளைக் கண்டு அதிசயித்தவாறே சின்னாத்தி குழந்தையிடம் சென்றதும் அவை எல்லாம் ஒதுங்கி வழிவிட்டன. குழந்தையை ஆசையோடு வாரியெடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அவள். என்ன அதிசயம்! சின்னாத்தி தான் பெற்றெடுத்த குழந்தையின் உணர்வை அப்போது அடைந்தாள். அவள் மார்பகத்தில் இருந்து தானே பால் சுரக்க, அதை குழந்தைக்குக் கொடுத்தாள். தலையில் ஆவாரக் கட்டோடும் மடியில் குழந்தையோடும் வீட்டுக்கு வந்தாள். வீட்டுக்கு வந்த சின்னாத்தியைக் கண்ட சின்னானுக்கு ஆச்சரியமாகிப் போனது. ஏதடி குழந்தை? என்று சின்னாத்தியைக் கேட்க, மேற்படி காட்சிகளை விளக்கிச் சொன்னாள். 32 தெய்வ அங்க லட்சணங்கள் பொருந்திய அந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு இருவரும் எல்லையில்லா சந்தோஷம் அடைந்தனர். சின்னானின் அப்பா பெயரான முத்துவையும், சின்னாத்தியின் அப்பா பெயரான வீரனையும் இணைத்து முத்துவீரன் என்று பெயர் சூட்டினர். சிறுவன் முத்துவீரன் இளைஞன் முத்துவீரனாக வளர்ந்தான். விளையாட்டு, கல்வி, வீரம் அனைத்திலும் சிறந்து விளங்கினான். அந்த காலகட்டத்தில் கோனேரிபட்டினத்து பொம்மன நாயக்கருக்கு பொம்மி என்ற அழகான மகள் பிறந்து வளர்ந்து பருவமடைந்தாள். பருவ வயது வந்த பொம்மியை 32 நாட்கள் ஒரு நாளைக்கு ஒரு குடிசை என்று கட்டி அதில் தங்க வைத்து, 32 நாட்களுக்குப் பிறகு சடங்கு செய்து அரண்மனைக்கு அழைக்க வேண்டும். இதற்காக சின்னான் காட்டிலே ஒரு நாளைக்கு ஒரு குடிசை கட்டி அதில் பொம்மியை தங்க வைத்து இரவு-பகல் காவல் இருக்க வேண்டும். மறுநாள் விடிந்ததும் அன்று தங்கிய குடிசையைக் கொளுத்திவிட வேண்டும். இதன்படி ஒவ்வொரு நாளும் குடிசை கட்டி அதில் பொம்மியைத் தங்க வைத்து காவலிருநஅது வந்தான் சின்னான். இப்படி முப்பது நாட்கள் கடந்துவிட்டன. அப்போது இடி, மின்னலுடன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. அதின் நனைந்தபடி காவலிருந்த சின்னானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

IMG_5441

இதைக் கண்ட மகன் முத்துவீரன், அப்பா! இன்னும் இரண்டு நாட்கள் தானே காவலிருக்க வேண்டும்? உங்களுக்குப் பதிலாக நான் குடிசை கட்டி காவலிருக்கிறேன் என்று சொல்ல பதறிப்போன சின்னான், மகனே, நீயோ வாலிப வயது பிள்ளை. இளவரசியின் காவலுக்கு நீ போகக்கூடாது மன்னருக்குத் தெரிந்தால் ஆபத்து என்று கூறினார். ஆனால் முத்துவீரன், நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களைப் போலவே கண்ணும் கருத்துமாக மன்னன் மகளுக்கு காவலிருப்பேன் என்று உறுதி கூறிவிட்டு குடிசை கட்டி காவலிருக்க காட்டுக்குச் சென்றான். அவன் குடிசை கட்டிக் கொடுக்க, உள்ளே திரையிட்டு யார் முகத்தையும் பார்க்காமல் தங்கியிருந்தாள் பொம்மி. அன்று மாலை இடி, மின்னலுடன் மழை கொட்டியது. மழையில் நனைந்த முத்துவீரன் குடிசைக்குள் இருந்த பொம்மியிடம் தங்கிக் கொள்ள கொஞ்சம் இடம் கேட்டான். திரைமறைவில் இருந்த பொம்மியோ, ஆண்கள் முகத்தையே நான் பார்க்கக்கூடாது. அப்படியிருக்க என் குடிசையில் தங்குவதா? முடியவே முடியாது என்று மறுத்தாள். பின்னர் மனமிரங்கி முத்துவீரனுக்கு குடிசைக்குள் இடமளிக்க, அவனது அழகைக் கண்டு முத்துவீரன் மீது காதல் கொண்டாள். 32 நாட்கள் முடிந்து, சடங்குகள் செய்து மகளைக் கூட்டிவர பெரும் சேனையுடன் புறப்பட்டார் பொம்மன நாயக்கர். சடங்கு வைபோகம் நடக்கும் சமயம் குடிசையில் இருந்த மணிவிளக்கை முத்துவீரனிடம் கொடுக்கும் போது ஆசையோடு அவனது கையைத் தழுவியபடி பொம்மி கொடுக்க இந்தக் காட்சியை நாயக்கர் பார்த்துவிட்டார். பொம்மியும், முத்துவீரனும் காதல் வயப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த நாயக்கர், சின்னான் சின்னாத்தியை அழைத்து மிரட்டினார். இதைக் கண்டு பயந்து போன இருவரும் முத்துவீரனை எச்சரித்தனர். ஆனால் முத்துவீரனும், பொம்மியும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். மகளுக்கு வேறு மாப்பிள்ளை தேடி மணமுடிக்கும் ஏற்பாடுகளில் பொம்மன நாயக்கர் இறங்கினார். அப்பொழுது பொம்மி முத்துவீரனுக்கு தகவல் சொல்ல, முத்துவீரன் குதிரைமீது ஏறி கோட்டைக்குள் புகுந்து பொம்மியைத் தூக்கிச் சென்றான். கோனேரிபட்டினத்திலிருந்து தெற்கு நோக்கிப் பறந்தது அந்த குதிரை. காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆமுர் மடுவு கருங்கல் பகுதியில் காதலர்கள் இருவரும் தங்கினர். முத்துவீரன்-பொம்மி இருவரையும் தேடிப் புறப்பட்ட பொம்மன நாயக்கர் படை கருங்கல் பகுதியில் அவர்களைக் கண்டுபிடித்து விட்டனர். அந்தப் படைவீரர்களோடு மோதி அனைவரையும் வெட்டி வீழ்த்திய முத்துவீரன், அந்த வெற்றியோடும் பொம்மியோடும் மதுரை நகருக்குச் சென்றான்.

மதுரைக்குச் சென்ற முத்துவீரன் தன் வீரச்செயல்கள் மூலம் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் படையில் சேர்ந்தான். முத்துவீரனின் வீரதீர செயல்களைக் கண்ட நாயக்கர் தனக்கு நம்பிக்கையான தளபதியாக நியமித்துக் கொண்டார். திருமலை நாயக்கர் சபையில் நாட்டியக்காரியாக இருந்தவள் வெள்ளையம்மாள். முத்துவீரனுக்கும், வெள்ளையம்மாளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தகேப்பட்டார் திருமலை நாயக்கர். இதனால் கோபமடைந்த நாயக்கர் முத்துவீரனையும், நாட்டியக்காரி வெள்ளையம்மாளையும் விசாரணைக்கு வர உத்தரவிட்டார். அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டே உண்மையாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணிய நாட்டியக்காரி வெள்ளையம்மாள் முத்துவீரனை விரும்பினாள். இதையெல்லாம் கண்ட நாயக்கர் திருமணமான ஆண் இன்னொறு பெண்ணை அடைய நினைப்பது குற்றம். அதுவும் என்னுடைய ஆட்சியில் நடக்கக்கூடாது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு அச்சுறுத்தல் வேண்டும். எனவே தகாத செயலைச் செய்த முத்துவீரனை மாறுகை-மாறுகால் வாங்குக என தண்டனையளித்தார். அதன்படி முத்துவீரனை கொலைக்களத்திற்கு கொண்டு போனார்கள் நாயக்கரின் வீரர்கள். அங்கு முத்துவீரனின் இடது கை, வலது காலை வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த நேரத்தில் பொம்மியும், வெள்ளையம்மாளும் கதறி அழுதபடி ஓடிவந்து முத்துவீரனின் இருபுறமும் விழுந்து புரண்டனர். அப்போது வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது. அதே இடத்தில் மூவரும் சிலைகளாக மாறி நின்றனர். இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் முத்துவீரனின் பெயர் மதுரைவீரன் என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply