மும்பையில் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் புகைப்பட நிபுணர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தபோது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் பாழடைந்த சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆகஸ்டு 22ஆம் தேதி பத்திரிகை புகைப்பட நிபுணர் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு இளம் குற்றவாளி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த மாதம் 19ஆம் தேதி போலீசார் 600 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். நீதிபதி ஷாலினி முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. நேற்று 3 வது நாளாக நீதிபதி முன்னிலையில் விசாரணை நடந்தது. அப்போது இளம் குற்றவாளி தவிர விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலீம் அன்சாரி சிராஜ் ரெஹ்மான் ஆகிய 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் புகைப்பட நிபுணரும் ஆஜரானார். அவருடன் தாயாரும் கோர்ட்டுக்கு வந்திருந்தார். கோர்ட்டில் ரகசிய விசாரணை நடந்தது.

விசாரணையின் போது குற்றவாளிகளை பெண் புகைப்பட நிபுணர் அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து அவர் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றி விவரித்துக்கொண்டு இருந்தார். 4 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் கோர்ட்டு அறையில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக புகைப்பட நிபுணர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே வழக்கு விசாரணையை இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) நீதிபதி தள்ளிவைத்தார்.

Leave a Reply