என்.டி.டி.வி ஒருநாள் தடைக்கு கருணாநிதி கண்டனம்
மத்திய அரசு என்.டி.டி.வி-க்கு ஒருநாள் தடை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த தடைக்கும் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இந்த தடையால் கருத்துரிமையை பாஜக நசுக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் இந்திய விமானப் படைத் தளத்திற்குள், 2-1-2016 அன்று பயங்கரவாதிகள் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அந்த நிகழ்வினை என்.டி.டி.வி. இந்தியா இந்தி சேனல் அதனை ஒளி பரப்பியதாக மத்திய பா.ஜ.க. அரசு குற்றம் சாட்டியதோடு, பத்து மாதங்கள் கழித்து, நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல், மறுநாள் பிற்பகல் 1 மணி வரை, என்.டி.டி.வி. இந்தி சேனலின் ஒளி பரப்புக்கு, 24 மணி நேரம் தடை உத்தரவையும் விதித்துள்ளது.
மத்திய பாஜக அரசின் செயல்பாடு கருத்துச் சுதந்திர விதிமுறை மீறலாகும். மத்திய அரசு இப்படிப்பட்ட நடைமுறைகளைத் தொடருமானால், அது இரண்டாவது நெருக்கடி நிலைக்குத் தான் வழி வகுக்கும் என்பதோடு, அந்தக் கறுப்பு நாட்களைத்தான் இந்திய மக்களின் நெஞ்சில் நிரந்தரமாகச் செதுக்கி விடும். எனவே பிரதமர் அவர்களே இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்த ஆட்சியில் இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வெளியிட முன் வர வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.