கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்: கமல்ஹாசன்
நாளை மறுநாள் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் கமல் கூறியதாவது: கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார், அதற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ‘நான் செல்லுகின்ற அரசியல் பாதையை திமுக தலைவர் கருணாநிதியிடம் கூறி ஆசி பெற வந்தேன். எனது கொள்கைகளை வரும் 21ஆம் தேதி அறிவிக்கவுள்ளேன். திமுகவின் கொள்கை என்னவென்று அனைவருக்கும் தெரியும், எனது கொள்கையுடன் அவர்கள் கொள்கை ஒத்துப்போகும் என்று இருதரப்பும் கருதினால் கூட்டணி குறித்து யோசிக்கலாம்’ என்று கமல் இந்த சந்திப்பு குறித்து கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கூறியபோது, ‘அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் கமல்ஹாசனுக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். காவிரி பிரச்சனை குறித்து திமுக கூட்டவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்படும்’ என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.