கிரானைட் ஊழல் வழக்கில் பி.ஆர்.பியை விடுதலை செய்த நீதிபதி சஸ்பெண்ட். சென்னை ஐகோர்ட் அதிரடி
பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தமிழகம் முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து பிஆர்பியை விடுதலை செய்த மேலூர் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி மகேந்திர பூபதியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் நீதித்துறையே அதிர்ச்சி அடைந்துள்ளது.
மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி என்பவர் கிரானைட் முறைகேடு வழக்குகளை கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து வந்தார். இந்த வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தும் அதை மதிக்காததால் மகேந்திர பூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் பி.ஆர்.பி.யை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக திடீரென மகேந்திர பூபதி உத்தரவிட்டார். இதுகுறித்து மதுரை மாவட்ட நீதிபதிகள் பஷீர் அகமது, சரவணன் ஆகியோர் மகேந்திர பூபதியிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மறுபடியும் இன்று காலை மேலூர் நீதிமன்றத்திற்கு வந்த முதன்மை நீதிபதி பஷீர் அகமது , மகேந்திர பூபதியை வழக்குகளை விசாரிக்க விடாமல் அனுப்பி விட்டார். உடனடியாக மேலூர் நீதிமன்றத்திற்கு வேறு ஒரு நீதிபதியை பொறுப்பு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியை இன்று சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி மகேந்திர பூபதிக்கு பதிலாக விரைவு நீதிமன்ற புதிய நீதிபதியாக பாரதிராஜா என்பவர் நியமனம செய்யப்பட்டுள்ளார். நீதித்துறையில் நடந்து வரும் இந்த பிரச்சினையால் நீதித்துறையே அதிர்ந்து போய் இருப்பதாக பரபரப்புடன் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.