shadow

ஜெ மரணத்தில் மர்மம். பள்ளி தோழி கீதா நீதிமன்றத்தில் வழக்கு

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவருடைய சொத்துக்களையும் பதவியையும் கைப்பற்ற கொலை நடந்துள்ளதாக சந்தேகம் அடைவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி கீதா இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

அவர் தன்னுடைய மனுவில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். சசிகலா, நடராஜன், இளவரசி, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், ஆலோசகர் ஷீலா பாலா கிருஷ்ணன், சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

பதவி, அதிகாரம், சொத்து ஆகிய காரணங்களுக்காக ஜெயலலிதாவை கொலை செய்ய, தவறான சிகிச்சை அளிக்க முன் வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்திய தண்டனை சட்டம் 327, 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். போயஸ் கார்டன், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று வழக்கறிஞர் கீதா தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் கீதா செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஜெயலலிதாவுடன் பள்ளி காலத்திலிருந்து எனக்கு நட்பு உண்டு. அவரது திடீர் மரணம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு என் ஆதரவு உண்டு.”என மனுதாரர் கீதா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply