shadow

ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது ஜெ.சொத்துக்குவிப்பு வாதம். தீர்ப்பு எப்போது?
jayalalithaa02
ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றே அனைத்து தரப்பினரும் தங்கள் இறுதி வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கின் தீர்ப்பு நெருங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. நேற்று கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வாதாடும்போது, “குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகள் சில, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுதாகரன் பெயரில் காண்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சொத்துகளை இவர்கள் பெயரில் பதிவு செய்வதற்காக அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டது. குறைந்த மதிப்பீட்டில் பதிவு செய்ய அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டார்கள்.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்படும் சுதாகரன் திருமணம் மிகவும் ஆடம்பரமாக பெருத்த செலவில் நடந்து உள்ளது. இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களின் இசை நிகழ்ச்சியும் பெருத்த செலவில் நடைபெற்றதாக அவரிடம் ரசீது வாங்கப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்தை அவர்கள் கட்டிடத்துடன் வாங்கி இருக்கிறார்கள். அதற்கான மதிப்பு மிகவும் குறைத்து காண்பிக்கப்பட்டு உள்ளது. தேசிய வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகைகள் வருவாய் என்று தவறாக காண்பிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஜெயலலிதா தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களுக்கு நீங்கள் பதில் வாதம் முன்வைக்கவில்லை. இந்த பட்டியலில் இருந்தே அனைத்தையும் வாசித்து வருகிறீர்கள். இயன்றவரை சுருக்கமாக வாதங்களை முன்வைக்க முயற்சியுங்கள். உங்கள் வாதங்கள் அனைத்தையும் எழுத்து வடிவில் தாக்கல் செய்ய முடியுமா?’’ என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த ஆச்சார்யா, “என்னால் இயன்றவரை சுருக்கமாகவும் அதே நேரத்தில் இந்த வழக்குக்கு மிகவும் முக்கியமான அம்சங்களைத்தான் என்னுடைய வாதத்தில் முன்வைத்து வருகிறேன். பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள். எக்கச்சக்கமான சாட்சியங்கள் என இந்த வழக்கின் மீதான வாதம் நேரத்தை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளும்” என்றார்.
 
உடனே நீதிபதிகள், “ஏற்கனவே உங்களுக்கு நிறைய நேரம் கொடுக்கப்பட்டது. இப்போது இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் வாதத்தை முடித்துக் கொள்வீர்களா? துஷ்யந்த் தவேயும் தனக்கு நேரம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். விடுமுறைக்கு முன்பு இதுதான் இறுதி நாள். விடுமுறையில் விசாரணையை தொடரலாமா?” என்று கேட்டனர்.

அதற்கு ஆச்சார்யா, தான் வெளிநாடு செல்வதாகவும், அதனால் மே 30ம் தேதிக்குப் பிறகு விசாரணையை தொடரலாம் என்றும், அப்போது தனக்கு ஒரு முழுநாள் தேவைப்படும் என்றும் கூறினார்.

இதற்கு நீதிபதிகள், ஜூன் 1ம் தேதியன்று முழுநாள் விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என்றும், அன்று ஆச்சார்யாவுக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும் என்றும், மீதி நேரத்தில் மற்றவர்கள் தங்கள் வாதங்கள் முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே, மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தான் சட்டத்தின் அடிப்படையில் சில வாதங்களை முன்வைக்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார். அவருடைய வாதத்தை எழுத்து வடிவில் தாக்கல் செய்யுமாறும், அவருக்கும் ஜூன் 1ம் தேதியன்று சிறிது நேரம் ஒதுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வரும் 16ம் தேதியில் இருந்து ஜூன் 28ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய இந்த அமர்வு கோடை விடுமுறையின் இடையில், அதாவது ஜூன் 1ம் தேதியன்று இந்த விசாரணையை மீண்டும் தொடங்கி அன்றே அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்து இருக்கிறது.

Leave a Reply