shadow

முதல்வர் சுயநினைவோடுதான் கைரேகை வைத்தாரா? திமுக கிளப்பும் சந்தேகம்

1தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை முதல்வர் சுயநினைவோடு கைரேகை வைக்கவில்லை என்றும் அவரை வேட்பாளராக அங்கீகரிக்ககூடாது என்றும் கரூர் தி.மு.க.வினர், நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘”ஒரு கட்சி தலைவருக்கோ, தலைமைக்கோ உடம்பு முடியாத சூழல் இருக்கும்போது, அவர் கைநாட்டு வைப்பதில் எந்த தவறோ, சட்டமீறலோ இல்லை. சொல்லப்போனால், கையெழுத்தைவிட கைநாட்டுதான் பாதுகாப்பு. ஆனால், கைநாட்டு வைக்கும் நபர் சுயநினைவில் செய்தாரா என்பதுதான் முதல்வர் விவகாரத்தில் கேள்வியாக எழுந்திருக்கிறது. சுயநினைவோடு இருந்தாலும்,அதற்கு சாட்சி கையெழுத்து போடும் நபர் சப்டிவிஷனல் ரேங்கிங்குக்கு மேல் இருக்க வேண்டும்.

ஆனால்,முதல்வர் கைரேகை உருட்டிய விவகாரத்தில் சாட்சி கையெழுத்தை அந்த ரேங்குக்கு குறைவான பாலாஜி போட்டிருக்கிறார். அதனால்தான் ‘இது போர்ஜரி. இது முதல்வர் சுயநினைவோடு செந்தில்பாலாஜியை வேட்பாளராக அறிவித்து,கைரேகை வைக்கலை. அதனால்,’செந்தில்பாலாஜியை வேட்பாளராக அங்கீகரிக்ககூடாது’ என்று அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம்,நீலகண்டனை வைத்து புகார் கொடுத்தோம். ‘அதுஇது’ன்னு மழுப்பியவர்,’ரெண்டு நாள்ல விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்’ன்னு உத்தரவாதம் கொடுத்தார். ஆனால், எந்த விசாரணையும் செய்யாமல், ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொண்டு, கடந்த ஐந்தாம் தேதி மாலை செந்தில்பாலாஜியை அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அங்கீகரித்து அறிவித்திருக்கிறார்.

இது முழுக்க முழுக்க சட்டத்துக்கு புறம்பான செயல். இதை இப்படியே விட்டோம்னா, தேர்தல் நடைமுறை சட்டங்களை கேலிக்கூத்தாக்கினதுபோல் ஆகிடும். வருங்காலத்தில் தவறான முன்னுதாரணமாகவும் இது ஆயிடும். அதனால்,’முதல்வர் கைரேகை விசயத்தை வைத்துப் பார்க்கும்போது,அ.தி.மு.க வேட்பாளராக செந்தில்பாலாஜி இருப்பது செல்லாது’ என்று சொல்லி நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். இந்த விசயத்தை எங்க கட்சித் தலைமை அனுமதியோடு விரைவில் உயர்நீதிமன்றம் செல்வோம்,” என்றார்.

Leave a Reply