ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையைப் பரிசீலிக்கும் வகையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம். உள்ளிட்டோரும், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு: பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, பணியாளர்களின் சம்பளம், கறவை மாடுகளின் விலை மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, அண்டை மாநில கூட்டுறவு பால் சங்கங்களும், தனியார் பால் நிறுவனங்களும் பாலின் விலையையும், கொள்முதல் விலையையும் உயர்த்தியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர உத்தரவிட்டுள்ளேன்.
பசும் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 ஆகவும், எருமைப் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இதையடுத்து பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.20-லிருந்து ரூ.23 ஆகவும், எருமைப்பால் விலை லிட்டருக்கு ரூ.28-லிருந்து ரூ.31 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால் தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பின் கீழுள்ள சுமார் 22.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள்.
இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.273.75 கோடி அளவுக்கு பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள். கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும், நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு பால் விற்பனை விலை உயர்த்தப்பட மாட்டாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.