கருணாநிதி மட்டும் செயல்படும் நிலையில் இருந்தால் நடக்கிறதே வேற! மு.க.ஸ்டாலின்
கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக இரண்டாவதாக உடைந்தது மட்டுமின்றி, இரண்டு முதல்வர்கள் மாறிவிட்டனர். இப்போது இருக்கும் முதல்வரின் நாட்களும் எண்ணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கருணாநிதி இன்று நன்கு செயல்படும் நிலையில் இருக்கிறார் என்றால் ஆற்காடு வீராசாமி மூலமாக ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்திருப்பார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் ஸ்டாலின் பேசியபோது, ‘தமிழகத்தில் இன்று எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரிந்து ஆடுகிறது. அரசு துறைகளில் ஊழல் நடைபெறுவது தெரிய வந்தால் பொதுமக்கள் எனக்கு தகவல் கொடுக்கலாம். இதன் மூலம் ஊழலை வெளிக்கொண்டுவர முடியும். இதற்காக திமுக உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்
விவசாயிகள் போராட்டம், தண்ணீர் பிரச்னை, மதுக்கடை போராட்டம் ஆகியவற்றிற்கு ஒன்று சேராத அதிமுகவினர், அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆட்சியில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக கூடி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நாற்காலிக்காக சண்டை போட்டுக்கொள்கின்றனர். இன்று தமிழகத்தில் அரசியல் அணி சேர்க்க பல முயற்சிகள் நடந்து வருகிறது. இன்று மட்டும் திமுக தலைவர் கருணாநிதி நன்கு செயல்படும் நிலையில் இருந்திருந்தால், ஆற்காடு வீராசாமி மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்திருப்பார் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்படியானால் மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவராக இருக்கின்றாரா? என்று சமூக வலைத்தளத்தில் பலர் கேள்வி கேட்டும், மிமி கிரியேட் செய்தும் வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.