தப்பி ஓடவும் இல்லை. தலைமறைவாகவும் இல்லை. விஜய் மல்லையா
இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பித்து ஓடியதாக விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டுக்களை அனைத்து ஊடகங்களும் அடுக்கடுக்காக வைத்திருக்கும் நிலையில் ‘நான் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறுவது முட்டாள்தனமானது. நான் ஒரு சர்வதேச பிசினேஸ்மேன். வர்த்தகம் தொடர்பாக அடிக்கடி இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவன். நான் நாட்டை விட்டு தப்பியும் ஓடவில்லை. தலைமறைவும் ஆகவில்லை’ என்று டுவிட்டரில் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியபோது, “நான் ஒரு இந்திய எம்.பி. எனது தாய்நாட்டின் சட்டத்திட்டங்களை மதிப்பவன். அதற்கு இணங்குபவன். மீடியாக்கள் என்னிடம் விசாரணை நடத்த வேண்டாம். மீடியாக்கள் டி.ஆர்.பி ரேட்டுக்காக பொய் புரட்டுகளை சொல்கின்றன. மீடியாக்களுக்கு பல ஆண்டுகாலமாக உதவிகள் செய்து வந்துள்ளேன். அதனை மறந்து விட வேண்டாம். தற்போது டி.ஆர்.பி ரேட்டுக்காக பொய் சொல்ல வேண்டாம்.
இப்போது எனது சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டுமென்று சொல்கின்றனர். எனக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றது என்பது வங்கிகளுக்கு தெரியாதா? அல்லது நாடாளுமன்றத்தில் நான் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பார்த்தால் தெரியாதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் விஜய் மல்லையா லண்டனில் உள்ள அவரது சொகுசு பங்களாவில் பதுங்கியிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.