shadow

எனது சொத்துக்களை ஒரே ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்கத்தயார். ப.சிதம்பரம் அதிரடி
P-Chidambaram
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் 14 நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதிமுக உள்பட ஒருசில கட்சிகளின் எம்.பிக்கள் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் கூறிய விளக்கம் ஒன்றில் ஆங்கில பத்திரிகையில் கூறியவாறு சொத்துக்கள் இருப்பதை நிரூபித்தால் அந்த சொத்துக்களை ஒரே ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்பனை செய்ய தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ப.சிதம்பரம் மேலும் கூறியபோது, ”கடந்த சில நாட்களுக்கு முன் எனது மகன் கார்த்தி சிதம்பரம் மீது பல பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது ஒரு திட்டமிட்டு வெளியிடப்பட்ட செய்தி என்பதை அனைவரும் அறிவர்.

கார்த்தி சிதம்பரம் குடும்பச் சொத்துகளை மேலாண்மை செய்து வருவதோடு பல முறையான வணிக நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக வருமான வரியையும் செலுத்தி வருகிறார். ஆண்டுதோறும் வருமானம் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்து வருகிறார். அவரது அனைத்து சொத்துக்கள், மூதலீடுகள் குறித்த விவரங்கள் அனைத்தும் வருமான வரி தாக்கலின்போது இணைக்கப்படுகின்றன.

கார்த்தி சிதம்பரத்திடம் மறைக்கப்பட்ட சொத்து ஏதும் இல்லை. வருமான வரித்துறை மற்றும் பிற அரசு சட்ட திட்டங்களுக்கு உள்பட அனைத்து வணிகங்களையும் கார்த்தி மேற்கொண்டு வருகிறார். பல சொத்து விவரங்களை கார்த்தி மறைத்துவிட்டார் என கூறுவது மிகவும் தவறானது. கார்த்தியிடம் மறைக்கப்பட்ட சொத்து ஏதும் இருந்தால் அதுகுறித்த விவரங்களை மத்திய அரசு தாராளமாக வெளியிடலாம். அப்படி ஏதும் இருந்தால் அவற்றையெல்லாம் ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்பதற்கு தயாராக இருக்கிறார்.

கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் திட்டமிட்டவை. என் மகன் என்பதற்காகவே கார்த்தி பழி வாங்கப்படுகிறார். உண்மையில் என்னை குறிவைத்தே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த செய்தி வெளியான நேரமும், இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் நோக்கத்தையும் என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. இதை வெளியிட்டவர்கள் மீது என்னால் பரிதாபம் மட்டுமே கொள்ள முடிகிறது. இறுதியில் சத்தியமே வெல்லும்”

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

Chennai Today News: I am ready to sell my property just one rupee said P.Chidhambaram

Leave a Reply