shadow

12நர்மதா நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் உட்கார்ந்து கொள்ளுமாறு சைகை காட்டப்பட, உட்கார்கிறாள்.

தேர்வாளர் 1 :

பெர்ஃப்யூம் பிரமாதமா இருக்கு. பாரிஸ்லே வாங்கியதா?

நர்மதா :

(சங்கடத்தை மறைத்தபடி வருவிக்கப்பட்ட புன்னகையுடன்) உருப்படியான கேள்விகளுக்குப் போகலாமா சார்?

தேர்வாளர் 2 :

எங்கள் கேள்வி பற்றிய உங்கள் தீர்ப்பு தேவையி ல்லைன்னு நினைக்கிறோம்.

நர்மதா : சாரி சார்.

தேர்வாளர் 2 : உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க

நர்மதா : உங்க கையிலே இருக்கிற என்னுடைய சி.வி.யிலேயே என்னைப் பற்றிய எல்லா விவரங்களும் இருக்கு சார்.

தேர்வாளர் 1 : உங்க சி.வியிலே அவ்வளவு சிறப்பாக எதுவும் இல்லையே!

நர்மதாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

நர்மதா : என் ப்ராஜக்டை எங்க கல் லூரி முதல்வர் பாராட்டித் தன் கைப்பட சான்றிதழ் அளித்திருக்கிறார் சார்.

தேர்வாளர் 2 : அது ஒரு பெரிய விஷயமாக எங்களுக்குப் படவில்லை.

நர்மதா : பாட்மிண் டன் விளையாட்டில் நான் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறேன்.

தேர்வாளர் 1 : மாநில அளவில் சாதித்தவர்கள்கூட இந்த நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறார்கள்.

நர்மதா தடுமாறுகிறாள். என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.

தேர்வாளர் 2 : (நர்மதாவின் சி.வி.யைப் பார்த்தபடி) உங்க ஃபீச்சர்ஸ் நல்லா இருக்கு.

நர்மதா: (அதிர்ச்சியுடன்) சார், இதுதான் லிமிட். (வேகமாக வெளியேறுகிறாள்)

நேர்முகத் தேர்வில் நர்மதா நடந்து கொண்ட விதம் பற்றிய ஒரு சிறு அலசல் இதோ. இது நர்மதாவுக்கு மட்டுமல்ல, நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் அனைவருக்குமே – முக்கியமாகப் பெண்களுக்கு – உதவிகரமாக இருக்கும்.

பெர்ஃப்யூம் வாசனை குறித்து ஒரு தேர்வாளர் தன் கருத்தைச் சொன்னதில் தவறு எதுவுமில்லை. ஆமாம் அல்லது இல்லை என்று இந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லியிருக்கலாம். அல்லது நகைச்சு வையாக “என் ஃப்ரண்டுதான் ஜோசியம் சொன்னா சார். இந்த பெர்ஃப்யூம் போட்டுட்டுப் போனா இன்டர்வியூவிலே நிச்சயமா செலக்ட் ஆயிடுவேன்னு” என்று கூறியிருக்கலாம்.

பெர்ஃப்யூம், பாரிஸ் என்று தேர்வாளர் கேள்வியை முதன்முதலாகக் கேட்டதில் ‘நீங்கள் வெளிநாடு போயிருக்கிறீர்களா?’ என்று பேச்சை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கம் இருக்கலாம். அல்லது நர்மதாவின் டென்‌ஷனைக் குறைப்பதற்காகப் பொதுவான ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவோமே என்ற நல்ல நோக்கம்கூட காரணமாக இருக்கலாம். எனவே ‘தேர்வாளர் கேட்டது அவசியமற்ற – அதாவது இர்ரெலவன்ட் கேள்வி’ என்று நர்மதா தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கக் கூடாது.

ஒருவேளை தேர்வாளரின் உடல் மொழி நர்மதாவுக்குப் பிடிக்காமல் போய், கேள்வி கேட்கும் சாக்கில் தன் சபல புத்தியை அவர் வெளிப்படுத்துகிறார் என்று நர்மதா கருதினால்கூட, சாமர்த்தியமாகத்தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டும். அதாவது தேர்வாளர்கள் கூறுவதை நல்லவிதமாகவும் எடுத்துக் கொள்ளலாம், மறைமுக அர்த்தமும் உண்டு என்றும் நினைக்கலாம் எனத் தோன்றினால் சந்தேகத்தின் பலனைத் தேர்வாளருக்குக் கொடுத்துவிடுவது நல்லது.

இந்த நேர்முகத் தேர்வில், குறைந்தது முதல் பாதியில் தேர்வாளர்கள் வழி தவறியதாகத் தெரியவில்லை. “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க” என்ற கேள்வி அரதப் பழசானதுதான். ஆனால் இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலில் உங்களைப் பற்றிய சிறப்பான இமேஜை உண்டாக்க முடியும். சுமார் இரு பக்கங்களில் அடங்கிவிடக்கூடய சி.வி.யில் உங்களுடைய எல்லா ப்ளஸ்களையும் எழுதிவிட முடியாது. தவிர, தாளில் காணப்படுபவை வெறும் வார்த்தைகள். அதை யே நீங்கள் சொல்லும்போது உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலம் உயிருட்டலாம். எனவே ‘என்னைப் பற்றிய விவரங்கள்தான் சி.வியில் இருக்கிறதே’ என்பதுபோல் நர்மதா அளித்த பதில் முட்டாள்தனமானது. ஒரு நல்ல வாய்ப்பை அவள் இழந்துவிட்டாள். அதுமட்டுமல்ல தேர்வாளர்களை ஏதோ முட்டாள்கள்போல (‘கையில் விவரங்கள் இருக்கும்போது எதற்காக அவற்றைக் கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?’) சித்திரித்து அவர்களின் கோபத்தையும் சம்பாதித்துவிட்டாள்.

இதன் விளைவாகத்தான் தேர்வாளர்கள் நர்மதா அடுக்கும் சாதனைகளைக்கூடக் கொஞ்சம் அலட்சியமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டத்தில்கூட நர்மதா சுதாரித்துக் கொண்டிருக்கலாம். அவள் மாவட்ட அளவில் சிறப்பு பெற்ற விளையாட்டில் வேறு சிலர் மாநில அளவில் சிறப்புப் பெற்றிருந்தால்தான் என்ன? “இருக்கட்டும் சார். அவங்களுக்கும், எனக்கும் சேர்த்து வேலைவாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு உங்க நிறுவனம் பெரியதுதான்” என்று புன்னகையோடு கூறலாம்.

“பீச்சர்ஸ் என்று தேர்வாளர் கூறுவது சி.வி.யில் காணப்படும் நர்மதாவின் சில தன்மைகள் அல்லது சாதனைகளாகக்கூட இருக்கலாம். எனவே நர்மதா கொஞ்சம் பொறுமை காட்டியிருக்கலாம்.

ஓர் இளம் பெண்ணிடம் தேர்வாளர் ஒருவர் இப்படியொரு கேள்வியைக் கேட்டாராம். “தூங்கி முழித்த உடனே பார்த்தால், நீங்க கர்ப்பமாகி இருக்கீங்க. என்ன செய்வீங்க?’’. இந்தக் கேள்விக்கு அந்த இளம் பெண் முகம் சிவந்து அழவில்லை. எரிச்சலில் வார்த்தைகளைக் கொட்டவில்லை. ஈவ் டீசிங் என்று புகார் கொடுக்கலாமா என்று யோசிக்கவில்லை. புன்னகையுடன் இப்படிப் பதிலளித்தாளாம். “உடனடியாக அந்த நல்ல விஷயத்தை என் கணவரிடம் பகிர்ந்து கொள்வேன்”.

இந்த சமயோசிதமான (அதாவது Application of mind எனப்படும்) குணநலன் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும். இந்தக் குணம் உங்களுக்கு எந்த அளவு இருக்கிறது என்பதைச் சோதிப்பதற்காகக்கூடச் சில எதிர்பாராத கேள்விகள் கேட்கப்படலாம்.

Leave a Reply